மூடா முறைகேடு புகார் நாடாளுமன்ற வளாகத்தில் பாஜ-மஜத உறுப்பினர்கள் போராட்டம்

பெங்களூரு: வால்மீகி வளர்ச்சி வாரிய ஊழல் மற்றும் மூடா ஊழல் வழக்குகளை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ வசம் ஒப்படைக்கக் கோரியும், முதல்வர் பதவி விலகக் கோரியும் பாஜ-மஜத எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சி வால்மீகி வளர்ச்சி கழகத்தின் பணத்தை முறைகேடாக பயன்படுத்தி ஊழல் செய்துள்ளது. மைசூரு மாநகர வளர்ச்சி குழுமம் (மூடா)வுக்கு சொந்தமான காலி மனைகளை சட்டப்பூர்வமாக ஏலம் விடாமல் ஊழல் செய்ததாகக் குற்றம் சாட்டி மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜ-மஜத எம்பிக்கள் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று போராட்டம் நடத்தினர்.

பதாகைகளை ஏந்தியவாறு முதல்வர் பதவி விலகக் கோரி கோஷமிட்டனர். கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் மேம்பாட்டிற்கு ஒதுக்கீடு செய்த நிதியை கொள்ளையடிக்கிறது. “ராகுல் காந்தி எங்கே, கார்கே எங்கே” என்று இந்தியில் முழக்கங்களை எழுப்பினர். “எதிர்க்கிறோம், எதிர்க்கிறோம், ஊழல் முதல்வரை எதிர்க்கிறோம்” என்று முழக்கம் எழுப்பினர்.

அப்போது பேசிய முன்னாள் முதல்வர் ஜெகதீஷ்ஷெட்டர், முடா ஊழல் குறித்து சட்டப்பேரவையில் பேச முதல்வர் அனுமதிக்கவில்லை என்றார். இது ஒரு மோசடி மூடிமறைப்பு. எங்கள் கூட்டணி கட்சி பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்கள் இரவு முழுவதும் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். இங்கும் போராட்டம் நடத்துகிறோம். வால்மீகி வளர்ச்சி வாரியத்தில் ரூ.187 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக கோவிந்த காரஜோலா குற்றம்சாட்டினார். போலி கணக்குகளுக்கு பணம் சென்றது. இதற்கு நிதித்துறையை நிர்வகிக்கும் முதல்வர்தானே பொறுப்பு. அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று பி சி. மோகன் வலியுறுத்தினார்.

The post மூடா முறைகேடு புகார் நாடாளுமன்ற வளாகத்தில் பாஜ-மஜத உறுப்பினர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: