வார விடுமுறையையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஏற்காடு: வார விடுமுறையையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல், மேட்டூர், பூலாம்பட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இவர்கள் படகு, பரிசல் சவாரி செய்து மகிழ்ந்தனர். வார விடுமுறை தினமான இன்று (ஞாயிறு), சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். இவர்கள் ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ச்சியடைந்தனர். அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, கிளியூர் நீர்வீழ்ச்சி, மான் பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ட்ஸ் சீட் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்தனர். பயணிகள் வருகை அதிகரித்ததால், சாலையோர கடைகளில் வியாபாரம் களைகட்டியது. அங்குள்ள ரிசார்ட், ஓட்டல்கள் நிரம்பின. ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதேபோல், இடைப்பாடி அருகே உள்ள பூலாம்பட்டியில் திரண்ட சுற்றுலா பயணிகள், அங்குள்ள கடைகளில் மீன்களை ஆர்வத்துடன் வாங்கி சாப்பிட்டனர். பின்னர் அவர்கள் விசைபடகில் படகு சவாரி செய்து, இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர். மேட்டூர் அணை பூங்காவில் திரளான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இவர்கள் அணை பூங்காவில் விளையாடினர். மீன்காட்சி சாலை, பாம்பு, முயல், மான் பண்ணைகளை பார்த்து ரசித்தனர்.

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு இன்று காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர். இவர்கள் மெயின் அருவி, சினி அருவி, காவிரி ஆற்று பகுதிகளில் மசாஜ் செய்து, எண்ணெய் தேய்த்து குளித்து மகிழ்ந்தனர். மீன் உணவுகளை வாங்கி சாப்பிட்டனர். பரிசல் சவாரி செய்து காவிரியின் அழகை கண்டு ரசித்தனர்.

The post வார விடுமுறையையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Related Stories: