நடிகை கவுதமியிடம் நில மோசடி பாஜ பிரமுகரின் மேலாளர் கைது

ராமநாதபுரம்: நடிகை கவுதமியிடம் நில மோசடி வழக்கில், பாஜ பிரமுகர் அழகப்பனுக்கு ராமநாதபுரம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அவரது மேலாளர் சென்னையில் கைதானார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த பாஜ பிரமுகர், சினிமா பைனான்சியர் அழகப்பன். இவர், நடிகை கவுதமிக்கு ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பகுதியில் 150 ஏக்கர் நிலம் வாங்கி தருவதாக ரூ. 3 கோடியே 16 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக ராமநாதபுரம் எஸ்பியிடம், நடிகை கவுதமி புகார் அளித்தார். இதன்பேரில், ராமநாதபுரம் நில மோசடி தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து, பாஜ பிரமுகர் அழகப்பனை கைது செய்தனர்.

பின்னர் அவரை, நீதிமன்ற அனுமதி பெற்று காவலில் எடுத்து விசாரித்தனர். நேற்று முன்தினம் நடந்த விசாரணையின்போது, ராமநாதபுரம் நீதிமன்றம் அழகப்பனுக்கு ஜாமீன் வழங்கியது. மேலும், மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக, அவரின் மேலாளரான மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த ரமேஷ் சங்கர்(55) என்பவரை, ராமநாதபுரம் தனிப்படை போலீசார் சென்னை எழும்பூரில் கைது செய்தனர். பின்னர் ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் (எண்-2) நீதிபதி நிலவேஸ்வரன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

The post நடிகை கவுதமியிடம் நில மோசடி பாஜ பிரமுகரின் மேலாளர் கைது appeared first on Dinakaran.

Related Stories: