நினைவில் கொள்ளக்கூடிய இந்த வெற்றிக்கு இந்திய வீரர்கள் தகுதியானவர்கள்: பாகிஸ்தான் ஜாம்பவான்கள் வாழ்த்து

மும்பை: ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை 17 வருடங்கள் கழித்து வென்று இந்தியா சாதனை படைத்தது. இந்த வெற்றியுடன் விராட் கோஹ்லி, ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த வெற்றிக்காக இந்திய அணிக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் ட்விட்டரில் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், “ரோகித் சர்மா இதை செய்துள்ளார். உணர்ச்சிகள் உச்சகட்டமாக இருக்கிறது. இந்திய அணியினர் இந்த வெற்றிக்கு தகுதியானவர்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள். 2023 உலகக்கோப்பை பைனலில் அகமதாபாத் நகரில் அவர்கள் தோற்றனர். அந்தத் தொடரையும் இந்தியா வெல்வதற்கு தகுதியானவர்கள் என்று நான் சொல்லியிருந்தேன். தற்போது அதை சாதித்துள்ள ரோகித் சர்மா களத்தில் அழுவதே இந்த வெற்றி அவருக்கு எவ்வளவு முக்கியம் என்பதை சொல்லும்” என்று கூறி உள்ளார். அதே போல முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் சாகித் அப்ரிடி “நினைவில் கொள்ளக்கூடிய இந்த வெற்றிக்காக இந்தியாவுக்கு வாழ்த்துக்கள். இதற்கு ரோகித் சர்மா முழுவதுமாக தகுதியானவர். அவர் அற்புதமான தலைவர். விராட் கோஹ்லி எப்போதுமே பெரிய போட்டிகளில் அசத்தக்கூடியவர்.

ஜஸ்பிரித் பும்ரா தற்சமயத்தில் உலகின் சிறந்த பவுலர் என்பதில் சந்தேகமில்லை. தென்னாப்பிரிக்காவுக்கு துரதிர்ஷ்டம். இருப்பினும் தொடர் முழுவதும் அவர்கள் அற்புதமாக விளையாடினர்’’ என்று தெரிவித்துள்ளார். இதுபோல் வகார் யூனுஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் “மகத்தான வீரர்கள் அழுத்தமான சூழ்நிலையில் தான் எழுவார்கள். விராட் கோஹ்லி அற்புதமான இன்னிங்ஸ் விளையாடினார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பும்ராவின் 2 ஓவர்கள் தான் அனைத்தையும் மாற்றியது. அவர் தரமான உலகக் கோப்பை வின்னர். இந்தியா மற்றும் ரோகித் சர்மாவுக்கு வாழ்த்துக்கள்” என்று கூறினார். ஷாஹீன் அப்ரிடி பதிவில் “அற்புதமான சர்வதேச டி20 கேரியருக்கு சிறப்பான முடிவு விராட் கோஹ்லி. டி20 உலகக் கோப்பை இந்தியா வென்றதற்காக வாழ்த்துக்கள். உங்கள் இருவருக்கும் (ரோஹித், விராட்) அற்புதமான டி20 கேரியருக்காக வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார். இதுதவிர சக்லைன் முஸ்டக், அஹ்மத் சேஷாத் போன்ற மேலும் பல பாகிஸ்தான் வீரர்கள் இந்தியவீர்களை வாழ்த்தியுள்ளனர்.

 

The post நினைவில் கொள்ளக்கூடிய இந்த வெற்றிக்கு இந்திய வீரர்கள் தகுதியானவர்கள்: பாகிஸ்தான் ஜாம்பவான்கள் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: