பிரச்சார் பாரதி தொலைக்காட்சி செய்தி அலைவரிசை இலச்சினையை காவி நிறத்தில் மாற்றுவதா? வைகோ கடும் கண்டனம்

சென்னை: பிரச்சார் பாரதி தொலைக்காட்சி செய்தி அலைவரிசை இலச்சினையை காவி நிறத்தில் மாற்றுவதா? என்று வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்துத்துவ மதவாத கோட்பாட்டை மோடி தலைமையிலான பாஜ அரசு தொடர்ந்து அரசுத் துறைகளில் திணித்து வருகிறது. 18வது மக்களவை தேர்தலில் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்கு மிக வேகமாக அரசு துறைகளின் மூலம் பிரசாரம் செய்வதற்கும் பாஜ அரசு துணிந்து விட்டது. இதன் ஒரு பகுதியாகதான் இந்திய அரசின் செய்தி ஒளிபரப்பு நிறுவனமான “பிரச்சார் பாரதி” தனது தொலைக்காட்சி செய்தி அலைவரிசை இலச்சினையை காவி நிறத்திற்கு மாற்றி இருக்கிறது.

ஏற்கனவே சிவப்பு நிறத்தில் இருந்ததை காவி வண்ணத்தில் மாற்றியதன் மூலம் மக்களவைத் தேர்தலில் மறைமுகமாக அல்ல நேரடியாகவே அரசு பொதுத்துறை நிறுவனம் பாஜவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க முனைந்திருக்கிறது. இதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. பிரச்சார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரியின் விளக்கம் ஏற்புடையதல்ல. ஜி-20 மாநாடு நடைபெற்ற போது அதன் லோகோவையும் காவி நிறத்தில் தான் பாஜ அரசு இடம் பெற செய்தது. தற்போது பிரச்சார் பாரதியும் தொலைக்காட்சி செய்தி அலைவரிசைகளின் இலச்சினையை காவி நிறத்தில் மாற்றியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. தேர்தல் ஆணையம் இறையாண்மையுள்ளதாக பாரபட்சம் இன்றி செயல்படுமானால் உடனடியாக இதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்.

The post பிரச்சார் பாரதி தொலைக்காட்சி செய்தி அலைவரிசை இலச்சினையை காவி நிறத்தில் மாற்றுவதா? வைகோ கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: