ஆனைமலை : ஆனைமலையில் கஞ்சா பதுக்கிய இருவரை கைது செய்து 1.250 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் அண்மை காலமாக கஞ்சா பதுக்கி விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து வெளியூர்களில் இருந்து கஞ்சா கொண்டு வந்து விற்பனை செய்யும் செயலில் ஈடுபடும் நபர்கள் குறித்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் ஆனைமலை போலீசார் பல்வேறு இடங்களில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது ஆனைமலை முக்கோணம் பகுதி வழியாக பைக்கில் வந்த இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.
அப்போது அதில் 1 கிலோ 250 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. போலீசார் விசாரணையில், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த வீரக்குமார் (23), பொள்ளாச்சி லோகேஷ் என்ற நாகராஜ் (24) என தெரிய வந்தது.
அவர்கள் வெளியூரில் இருந்து கஞ்சா கடத்தி கொண்டு வந்து விற்பனைக்காக பதுக்கியது தெரிய வந்தது. இதையடுத்து கஞ்சா பதுக்கிய வீரக்குமார், நாகராஜ் ஆகியோரை ஆனைமலை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 1கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட இருவரையும் பொள்ளாச்சி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
