×

ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் ஆடி அமாவாசை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

 

ஏரல், ஆக. 4: ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரசித்தி பெற்ற ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆடி, தை அமாவாசை சிறப்பு வாய்ந்ததாகும். இத்திருவிழாக்கள் கொடியேற்றத்துடன் துவங்கி 12 நாட்கள் நடைபெறும். இந்தாண்டுக்கான ஆடி அமாவாசை திருவிழா, நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு கோயில் முன் மண்டபத்தில் உள்ள வெள்ளி கொடிமரத்தில் கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டிய நாடார் கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து சுவாமிக்கு பல்வேறு அபிஷேக, அலங்கார, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் ஏரல் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு 8 மணிக்கு கேடய சப்பரத்தில் அருணாசல சுவாமி கோயில் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.

இன்று இரவு 8 மணிக்கு திருஆல் வாகனத்தில் குறி சொல்லும் கூத்தன் அலங்காரத்தில் சுவாமி கோயில் வலம் வரும் நிகழ்ச்சி, நாளை (5ம் தேதி) இரவு முல்லை சப்பரத்தில் சதாசிவமூர்த்தி அலங்காரத்தில் வலம் வருதல், இரவு 9 மணிக்கு பூங்கோவில் சப்பரத்தில் நடராஜர் அலங்காரத்தில் வலம் வருதல் நடக்கிறது. 7ம் தேதி இரவு 9 மணிக்கு திருப்புன்னை சப்பரத்தில் நவநீதகிருஷ்ண அலங்காரத்தில் கோயிலை வலம் வருதல், 8ம் தேதி இரவு 8.30 மணிக்கு ஏகசிம்மாசன சப்பரத்தில் பாலசேர்மன் அலங்காரத்தில் வலம் வருதல் நடக்கிறது. 9ம் தேதி இரவு 9 மணிக்கு பல்லக்கில் தவழ்ந்த கிருஷ்ணத் திருக்கோலத்தில் வலம் வருதல், 10ம் தேதி இரவு 8 மணிக்கு வில்வச் சப்பரத்தில் ராஜாங்க அலங்காரத்தில் வலம் வருதல் நடக்கிறது. 11ம் தேதி இரவு 7 மணிக்கு சின்ன சப்பரத்தில் பிச்சாண்டவ மூர்த்தி திருக்கோலத்தில் கோயில் மற்றும் ஏரல் நகர் வீதி வலம் வருதல், இரவு 7.30 மணிக்கு பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.

திருவிழா காலங்களில் தினசரி காலை சேர்ம விநாயகர் திரு உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. திருவிழாவின் சிகரமான ஆடி அமாவாசை நிகழ்ச்சி, 12ம் தேதி நடக்கிறது. அன்று பகல் 1.30 மணிக்கு சுவாமி உருகுபலகையில் கற்பூரவிலாசம் வரும் காட்சி, சிறப்பு அபிஷேக ஆராதனை, மாலை 5 மணிக்கு இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்மத் திருக்கோலம், இரவு 11 மணிக்கு 1ம் காலம் கற்பகப் பொன் சப்பரத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. 13ம் தேதி காலை 4 மணிக்கு 2ம் காலம் வெள்ளை சாத்தி தரிசனம், காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், பகல் 1 மணிக்கு 3ம் காலம் பச்சை சாத்தி தரிசனம், மாலை 5.30 மணிக்கு தேவி நட்டார் கொண்ட அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு, மாலை 6 மணிக்கு ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் பந்தலில் தாகசாந்தி,

இரவு 8 மணிக்கு சேனைத் தலைவர் சமுதாயம் உச்சினிமாகாளி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு, இரவு 10.30 மணிக்கு சுவாமி திருக்கோயில் மூலஸ்தானம் வந்து சேரும் ஆனந்த காட்சி, திருக்கற்பூர தீப தரிசனம் நடக்கிறது. 12ம் திருநாளான ஆடி அமாவாசை நிறைவு விழா, 14ம் தேதி நடக்கிறது. அன்று காலை 8 மணிக்கு தீர்த்தவாரி பொருநை நதியில் சகல நோய் தீரும் திருத்துறையில் சுவாமி நீராடல், பகல் 12.30 மணிக்கு அன்னதானம், பகல் 3 மணிக்கு ஆலிலை சயன அலங்காரம், மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவு 9 மணிக்கு திருவருள் புரியும் மங்கள தரிசனம் நடக்கிறது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டிய நாடார் செய்து வருகிறார்.

Tags : Aadi Amavasaya festival ,Aral Chairman Arunachal Swamy Temple ,Aral ,Aral Chairman Arunachal Swamy Temple… ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...