செங்கோட்டை, ஆக.3:குற்றாலத்தில் சீசன் ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் துவங்கி ஜூலை, ஆகஸ்ட் மாதம் வரை 3 மாதங்கள் நீடிக்கும். இந்தாண்டு வழக்கம் போல ஜூன் மாத துவக்கத்தில் சாரல் மழையுடன் சீசன் துவங்கியது, கடந்த ஜூன் 9ம் தேதி நள்ளிரவு முதல் குண்டாறு அணை நிரம்பி வழியே துவங்கியது. தொடந்து 50 நாட்களாக நிரம்பி தண்ணீர் வழிந்து வந்த நிலையில் ஜூலை 31ம் தேதி இரவு 8 மணி முதல் ஆக.1ம் தேதி காலை வரை தொடர்ந்து பெய்த மழையால் குண்டாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
அணைப்பகுதியில் 52 மிமீ மழை பதிவானது. அணை நிரம்பி 69 கன அடி நீர் வெளியேறி வருகிறது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து உள்ளதால் நேற்று சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர். மேலும் அணைப்பகுதியில் செங்கோட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குண்டாறு அணைப்பகுதியில் சுற்றுலா பயணிகள் அதிகளவு வருவதால் அடிப்படை தேவையான கழிப்பிடம், பெண்கள், உடை மாற்றும் அறைகள் அமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
