ராஜபாளையம், ஆக. 2: ஆடிப்பட்டம் காரணமாக, ராஜபாளையம் வட்டார விவசாயிகளுக்கு மானிய விலையில் காய்கறி விதைத்தொகுப்பு வழங்கப்பட்டது. ராஜபாளையம் வட்டாரத்திற்குட்பட்ட தெற்கு தேவதானம் கிராமத்தில், ஆடிப்பட்டத்தை முன்னிட்டு மானிய விலையில் காய்கறி விதைத் தொகுப்பு வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலைத் துறை இயக்குநர் முத்துலட்சுமி, 25 பயனாளர்களுக்கு காய்கறி விதைத் தொகுப்புகளை வழங்கி திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.இத்திட்டத்தின் கீழ், ஒரு காய்கறி விதைத் தொகுப்பு ரூ.30 என, மானிய விலையில் வழங்கப்படுகிறது.
ஒரு தொகுப்பில் தக்காளி, கத்தரிக்காய், வெண்டை, கீரை, பாகற்காய் மற்றும் சீனி அவரை உள்ளிட்ட காய்கறி விதைகள் இடம்பெற்றுள்ளன. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இந்த விதைத் தொகுப்புகளை தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 88259 45291 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொள்ளலாம் என, தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
