திருமணம், பண்டிகை, முக்கிய நிகழ்ச்சிகளுக்கு வேன்களில் ஆட்களை ஏற்றி செல்ல கூடாது

 

கரூர், ஆக. 3: மினி வேன்களில் ஆபத்தை உணராமல் அதிகளவு பொதுமக்களை ஏற்றிச் செல்லும் நிகழ்வுகளை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்டோ, வேன், கார், பேரூந்துகள் போன்ற பயணிகள் செல்லும் அனைத்து விதமான வாகனங்களிலும் குறிப்பிட்ட அளவில்தான் பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என விதிமுறை உள்ளது. மேலும், சரக்கு வேன்களில் லோடுகள் மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும் என்ற விதியும் உள்ளது. ஆனால், பெரும்பாலான கிராமப் பகுதிகளில் திருமணம், பண்டிகை போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு அவ்வப்போது வேன்களில் பொதுமக்களை அதிகளவு ஏற்றி அழைத்துச் செல்லும் நிகழ்வுகள் தமிழகம் முழுதும் நடைமுறையில் இருந்து வருகிறது. இதுபோன்ற நிகழ்வுகளால் ஒரு சில பகுதிகளில் விபத்துக்கள் ஏற்பட்டும் வருகிறது.

இதே போன்ற நிகழ்வுகள் கரூர் மாவட்ட பகுதிகளிலும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. வேன்களில் அதிகளவு பொதுமக்களை ஏற்றிச் செல்லும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுபோன்ற பொதுமக்களை அதிகளவு ஏற்றிச் செல்லும் வாகனங்களை கண்காணித்து சீரமைக்கவும், அவர்களுக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி இதுபோன்ற நிகழ்வுகளை முற்றிலும் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: