போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: மறு முறை மனு வழங்க வராத வகையில் பொதுமக்கள் குறைகள் மீது உடனடி தீர்வு காண வேண்டும்

 

கரூர், ஜூலை 28: மறுமுறை மனு வழங்க வராத வகையில், பொதுமக்கள் குறைகள் மீது உடனடி தீர்வு காண வேண்டும் என்று கரூரில் நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு, கலெக்டர் முத்துக்குமரன் உத்தரவிட்டார். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் முத்துக்குமரன் தலைமையில் நடைபெற்றது. பின்னர் மாவட்ட கலெக்டர் கூறுகையில், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணவும், அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்திடவும், பெண்களின் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளில் அரசு அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமெனவும், குறிப்பாக பொதுமக்கள் ஒருமுறை வழங்கிய மனுக்கள் மீண்டும் வராத வகையில் மனுவின் மீது உரிய தீர்வு வழங்கப்படுவதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, வங்கிக் கடன்கள், பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 717 மனுக்கள் வரப்பெற்றன.மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமும் இன்றி மனுக்களை வழங்கும் வகையில் மாவட்ட கலெக்டரின் தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென நடத்தப்பட்டு வரும் குறைதீர் முகாமில் வீட்டுமனைப் பட்டா, உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து அளிக்கப்பட்ட 66 மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 7 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.98,976 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் முத்துக்குமரன் வழங்கினார். தொடர்ந்து, போதை இல்லாத தமிழ்நாடு, போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெற்ற விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.இதில் மாவட்ட வருவாய் அலுவலர் விமல்ராஜ், கரூர் வருவாய் கோட்டாட்சியர் சக்தியபாலகங்காதரன், மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார், மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Related Stories: