×

மின்சார துறையில் தனியார் மயத்தை கைவிட வேண்டும்: சிஐடியு கூட்டத்தில் வலியுறுத்தல்

 

பெரம்பலூர், ஆக.3: மின்சார துறையை தனியார் மயமாக்கலை கைவிட வேண்டும் என பெரம்பலூரில் நடந்த சிஐடியு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெரம்பலூர் மூன்று ரோடு அருகேயுள்ள சிஐடியு சங்க அலுவலகத்தில் நேற்று (2ம்தேதி) சிஐடியு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட பொது தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரெங்கராஜ் தலைமைவகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் அகஸ்டின் கலந்து கொண்டு சிறப்புரைபேசினார். கூட்டத்தில் ஆட்டோ சங்க செயலாளர் ரெங்கநாதன், ஆட்டோ சங்க நிர்வாகிகள் பெரியசாமி, சிவசங்கர், கிளை நிர்வாகிகள் குமார், செல்வா கனகராஜ் சாலையோர வியாபாரி சங்கத்தின் மாவட்ட செயலாளர் குணசேகரன், மாவட்டதலைவர் பன்னீர் செல்வம், மாவட்ட பொருளாளர் சுரேஷ், மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் செல்வி, மாவட்ட குழு உறுப்பினர்கள் வேணி கொளஞ்சி, பொதுத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் கிருஷ்ணசாமி, சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் மணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இந்தக் கூட்டத்தில் தொழிலாளர் விரோத 4 சட்டத் தொகுப்புகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். விவசாய விளை பொருட்களுக்கு சட்டப் பூர்வ குறைந்த பட்ச ஆதார விலை வழங்க வேண்டும். மின்சார துறையை தனியார் மயமாக்கலை கைவிட வேண்டும். குறைந்த பட்ச ஊதியத்தை ரூ.26,000 ஆக உயர்த்த வேண்டும். கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி, நாள் ஒன்றுக்கு ரூ.700 வழங்கி மீண்டும் நடைமுறைப்படுத்திட வேண்டும். விவசாய கடன்களை முழுவதும் தள்ளுபடி செய்ய வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களின் விற்பனையை கைவிட வேண்டும். ஓய்வூதியத்தை உறுதி செய்யும் வகையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும். கல்வி மற்றும் தேர்வு முறைகேடுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் வருகிற 10ம்தேதி புதிய பேருந்து நிலையத்தில் காலை மறியல் போராட்டம் நடத்துவது என தீர்மானங்கள் நிறை வேற்றப் பட்டன. இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் மாவட்ட, வட்டார நிர்வாகிகள், சார்புடைய சங்கங்களின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

 

Tags : CITU ,Perambalur ,CITU District ,Coordination ,Committee ,CITU District… ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...