தஞ்சையில் இன்று த.வெ.க.அரசைக்கண்டித்து தி.மு.க மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

 

பெரம்பலூர்,ஆக. 3: விவசாயிகளை வஞ்சிக்கும் த.வெ.க.அரசைக்கண்டித்து தி.மு.க சார்பில் தஞ்சையில் இன்று (3ம் தேதி) நடை பெறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளாகக் கலந்து கொள்ளவேண்டும் என பெரம்பலூர் திமுக மாவட்ட செயலாளர் ஜெகதீசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது : தமிழ்நாடு விவசாயிகளின் நலன்களை புறக்கணித்து, மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை கோட்டைவிட்ட த.வெ.க. அரசைக் கண்டித்து, தஞ்சையில் தமிழ்நாடு சட்ட மன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பெரம்பலூர் மாவட்ட திமுக கட்சியினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

திமுக துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ஆ. ராசா.எம்.பி. வழிகாட்டுதல் படி, விவசாய கடன் முழுமையாக தள்ளுபடிசெய்ய வேண்டியும், மேகதாது அணை கட்டுவதை தடுக்க தவறியதைக் கண்டித்தும், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டியும், பயிர்க்கடன் தள்ளுபடி செய்யாத மோசடியை கண்டித்தும், மேட்டூர் அணையில் இருந்து ஜீன்-12, அன்று தண்ணீர் திறக்காதது, காவிரி பிரச்சினையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட மறுப்பது என தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் விளம்பர மாடல் த.வெ.க. அரசைக் கண்டித்து இன்று திங்கட்கிழமை காலை 10 மணிக்கு தஞ்சை பனகல் கட்டிடம் அருகில், எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெறுகிறது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு வரவேற்புறையாற்றுகிறார். மனித நேய மக்கள் கட்சி மாநிலச் செயலாளர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா, ம.ஜ.க மாநில தலைவர் தமீமுன் அன்சாரி, எஸ்.டி.பி.ஐ. மாநிலச்செயலாளர் நெல்லை முபாரக், தி.க.மாநில பொதுச் செயலாளர் இரா. ஜெயக்குமார் மற்றும் தே.மு.தி.க., மக்கள் தமிழக நீதி மையம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள முன்னாள் எம்எல்ஏக்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களர், முன்னாள், இன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கிளை, வார்டு கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த கலந்து கொள்ள வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Stories: