மீன்சுருட்டி குரு பஞ்சாட்சர சித்தர் பீடத்தில் குருபூஜை ஏராளமானோர் சாமி தரிசனம்

 

தா.பழூர், ஆக.3: அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியில் பிரசித்தி பெற்ற சொக்கலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது . இக்கோவிலை 300 ஆண்டுகளுக்கு முன்னர் பஞ்சாட்சர சாமிகள் என்பவர் கட்டி வழிபட்டார். இந்த கோவில் கட்டும்போது அதில் கட்டிடப் பணி வேலை பார்த்தவர்களுக்கு தினமும் சம்பளம் வழங்கும்போது அங்கு உள்ள மரத்தின் இலையை பறித்து அவர்களுக்கு கூலியாக வழங்கியுள்ளார். அவரவர் செய்த வேலைக்கு ஏற்றார்போல் அவர்களுக்கு சன்மானம் கிடைத்தது. மேலும் தன்னுடைய சித்திகள் மூலம் மீன்சுருட்டி பகுதி மக்களுக்கு பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தி காட்டினார் என்பது வரலாறு. பல்வேறு சிறப்புகளைப் பெற்ற அவர் ஆடி மாதம் பூரட்டாதி நட்சத்திரத்தில் ஜீவசமாதி அடைந்தார்.

இதையொட்டி ஆண்டுதோறும் அவர் ஜீவ சமாதி அடைந்த இடத்தில் ஆடி மாதம் பூரட்டாதி நட்சத்திரம் அன்று பஞ்சாட்சர சாமிக்கு குருபூஜை நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற குருபூஜை விழாவில் சிவனடியார்கள், திருக்கூட்டத்தினர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் இணைந்து பஞ்சாட்சர சுவாமிகள் சித்தர் பீடத்தில் குருபூஜை விழா நடத்தினர். சொக்கலிங்கேஸ்வரருக்கு பால்,பன்னீர், இளநீர், சந்தனம் உள்பட 16 வகையான திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதில் முன்னாள் எம்எல்ஏ மாசிலாமணி மற்றும் சாதுக்கள் மற்றும் சுற்று பகுதிகளில் இருந்து திரளான சிவபக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அரசினர் மேல்நிலைப்பள்ளி கட்டிடக்குழு பொறுப்பாளர்கள் மற்றும் அறங்காவலர் நித்தியானந்தன் ஆகியோர் செய்து இருந்தனர்.

 

Related Stories: