பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூரில் தாலுகா நீதிமன்றம் அமைக்க கோரி எம்.எல்.ஏ.,விடம் வழக்கறிஞர்கள் மனு

 

பெரம்பலூர், ஆக. 3: ஆலத்தூரில் தாலுகா நீதி மன்றம் அமைக்க உத்தரவிடப் பட்டு 9ஆண்டுகள் ஆகிறது. சொந்தக் கட்டிடம் கட்டும்வரை பயன்பாடு இல்லாத அரசுக் கட்டிடத்தில் இடம் ஒதுக்க பரிந்துரை செய்யுங்கள் என பெரம்பலூர் எம்எல்ஏ சிவக்குமாரிடம் வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூரில் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே, அதாவது 125 ஆண்டுகளுக்கு முன்பே தற்போதுள்ள தாலுகா அலுவலகம் பின்புறத்தில் அமைக்கப்பட்டு, சொந்தக் கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. இதர மாவட்ட தலைமை நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், தலைமை குற்றவியல் நீதிமன்றம் உள்ளிட்ட 6,7 நீதிமன்றங்கள் எளம்பலூர் சாலை, வடக்கு மாதவி சாலை ஆகியவற்றில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தன.

பிறகு 2008 ஆம் ஆண்டு பெரம்பலூரில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்பட்டு, 2009 பிப்ரவரி 7ம் தேதி திறக்கப் பட்டது. இந்த ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வந்த அனைத்து நீதிமன்றங்களும் இணைக்கப் பட்டன. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் தாலுகா நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என்கிற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி, 10-ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 2019 ஆம் ஆண்டு வேப்பந்தட்டையிலும், 2021ஆம் ஆண்டு குன்னத்திலும் தாலுகா நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. இந்த 2 தாலுகாக்களிலும், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஆகியன வாடகை கட்டிடத்தில்தான் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு வேப்பந்தட்டையில் பாலையூர் செல்லும் சாலையில் நீதி மன்றம் சொந்த கட்டிடத்தில் இயங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆலத்தூர் தாலுகாவிற்கான மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நீதி மன்றம் அமைக்க கடந்த திமுக ஆட்சியிலேயே உத்தரவிடப் பட்டு, சொந்த கட்டிடம் கட்டும் வரை, சும்மா இருக்கும் அரசுக் கட்டிடத்தில் இயங்குவதற்கும் அனுமதி கிடைக்காததால், பெரம்பலூர் மாவட்ட நீதிபதிகளும், வழக்கறிஞர்களும், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தை நாடியுள்ளனர். குறிப்பாக கடந்த பிப்ரவரி மாதம் பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக பணிபுரிந்து வந்த மிருணாளினி என்பவர் ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலக பழைய கட்டிடத்தில் நீதிமன்றம் இயங்க உத்தரவிட்ட நிலையில், ஆட்சி மாற்றம் மட்டுமன்றி, ஆட்சியர் மாற்றமும் நடந்து விட்டதால் நீதிமன்றம் இயங்குவதற்கான இடம் உறுதிசெய்யப்படாமல் உள்ளது.

இது தொடர்பாக முன்னாள் அரசு வழக்கறிஞர் அய்யம் பெருமாள், வழக்கறிஞர்கள் சிவசங்கர், சண்முகம், சுரேஷ் உள்ளிட்டோர், ஆலத்தூரில் மாவட்ட உரிமையியல் நீதி மன்றம் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் சொந்த கட்டிடத்தில் இயங்கும் வரை அரசு கட்டிடத்தில் இயங்க மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்யுங்கள் என பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ சிவக் குமாரிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர். இது தொடர்பாக தற்போதுள்ள தலைமை நீதிபதிக்கு முன்பாக பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக பணிபுரிந்து வந்த பத்மநாபன் மற்றும் குற்றவியல்நடுவர் நீதி மன்றநீதிபதி, வழக்கறிஞர்கள், பொதுப்பணித்துறை பொறியாளர் உள்ளிட்டோர் ஆலத்தூரிலுள்ளஅரசு கட்டிடம் ஒன்றைப் பார்வையிட்டு அதனை தங்களுக்கு ஒதுக்கித் தருமாறு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இருந்தும் காலதாமதம் ஆகி வருவதால் ஆலத்தூரில் மாவட்ட உரிமையியல் நீதி மன்றம் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைப்பதற்கு ஒத்துழைப்பு தராத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து வருகிற 17ஆம் தேதி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டம் நடத்த ஆலத்தூர் வட்டார வழக்கறிகள், முன்னாள் அரசு வழக்கறிஞர் அய்யம்பெருமாள் உள்ளிட்டோர் பெரம்பலூர் காவல் நிலையத்தில் அனுமதி கேட்டுள்ளனர். ஆலத்தூர் தாலுகாவில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

 

 

Related Stories: