தஞ்சாவூர், ஆக.3: தஞ்சாவூர் மேலவெளி ஊராட்சியில் சேதமடைந்து கிடக்கும் குப்பை சேகரிக்கும் வாகனங்கள்,அதனை சரி செய்ய வேண்டும் அல்லது புதிய வாகனம் மூலம் வீடுகளுக்கு சென்று குப்பைகளை சேகரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூரை எடுத்த மேல வெளி ஊராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளது. இந்த பகுதியில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் மேல வெளி ஊராட்சிக்கு சொந்தமாக ஒரு குப்பை சேகரிக்கும் வாகனம் மட்டுமே இயங்கி வருகிறது. ஆனால் ஊராட்சி வளாகத்தில் சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட குப்பை சேகரிக்கும் வாகனங்கள் சேதமடைந்து உள்ளது. தற்போது ஒரே ஒரு வாகனம் மட்டும் இருந்து வருகிறது. மேலவெளி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேரும் குப்பைகளை அகற்றுவதற்கு எந்த ஒரு பணியாளர்களும் நேரடியாக தெருகளுக்கு சென்று பொதுமக்களிடம் குப்பையை சேகரிப்பது இல்லை.
இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேரும் குப்பைகளை ஆங்காங்கே காலி மனைகள் மற்றும் தெருவோரங்களில் கொட்டி வருகின்றனர். இதனால் மேல வெளி ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு தெருக்களில் ஆங்காங்கே குப்பைகள் கொட்டி கிடக்கிறது. மேலும் தெருக்களில் குப்பையை கொட்டி வைப்பதற்கான பெரிய அளவிலான குப்பைத் தொட்டியும் எங்கேயும் இல்லை. குப்பை சேகரிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் பணியாளர்கள் யாரும் வீடுகளுக்கு சென்று குப்பையை சேகரிப்பதில்லை. எனவே ஊராட்சி அலுவலகத்தில் சேதம் அடைந்து கிடக்கும் குப்பை சேகரிக்கும் வாகனங்களை சரி செய்து அல்லது வேறு வாகனங்கள் கொள்முதல் செய்து தினம்தோறும் பொதுமக்களிடம் குப்பைகளை சேகரித்து அதனை குப்பை தரம் பிரிக்கும் இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
