மதுரை, ஆக. 3: மதுரை கூடல்நகரில் இரவு 3 மணிநேரத்திற்கும் மேலாக நிலவிய மின்வெட்டை கண்டித்து அப்பகுதி மக்கள் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு கடுமையாக அரங்கேறி வருகிறது. குறிப்பாக இரவு நேர மின்வெட்டில் பொதுமக்கள் சிக்கி தூக்கத்தை தொலைத்து வருகின்றனர். இதுபோல் மதுரையிலும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஆங்காங்கே பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு கடுமையாக அரங்கேறி வருகின்றன. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் சிக்கந்தர் சாவடி, கோவில்பாப்பாகுடி, வாகைக்குளம் பகுதிகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் நேற்று இரவு 10.30 மணி முதல் மின்வெட்டு ஏற்பட்டது.
இதனால் தூக்கத்தை தொலைத்த மக்கள் குழந்தைகளுடன் இரவு 11 மணியளவில் சிக்கந்தர்சாவடி மின்வாரிய அலுவலகம் முன்பாக வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார், மின்வாரிய அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சமரசம் ஏற்படவில்லை. தொடர்ந்து மறியல் நடந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் எல்லீஸ் நகர், ஆண்டாள் புரம், ஆனையூர், கூடல் புதூர், மகபூப்பாளையம், அரசரடி, காளவாசல் பகுதிகளில் ஏற்பட்ட இரவு நேர மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் எல்லீஸ் நகர் மின்வாரிய அலுவலகத்ைத முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
மதுரையில் 4 சிறுவர்கள் கைது
மதுரை மாநகரில் போதை பொருட்களின் விற்பனை மற்றும் புழக்கத்தை தடை செய்யும் விதமாக போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், உத்தரவுப்படி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி திருப்பாலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக போதை மாத்திரைகள் வைத்திருந்த 4 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 173 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
