×

ராமேஸ்வரம், தொண்டியில் செங்கோல் மாதா ஆலய தேர்பவனி: திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

 

ராமேஸ்வரம், ஆக.3: ராமேஸ்வரம், தொண்டியில் புனித செங்கோல் மாதா ஆலய அர்ச்சிப்பு மற்றும் திருவிழா தேர் பவனி வெகு சிறப்பாக நடைபெற்றது. ராமேஸ்வரம் சுடுகாட்டன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த புனித செங்கோல் மாதா ஆலயத்தை மகிமைபடுத்தும் விதமாக ஏற்கனவே ஓட்டு கட்டிடத்தில் இருந்த ஆலயத்தை பழமை மாறாமல் புதுப்பித்து அர்ச்சிப்பு விழா நடத்தினர். இதையெடுத்து வெள்ளிக்கிழமை மாலை சிவகங்கை மறைமாவட்ட ஆயர் லூர்து ஆனந்தம் புதுப்பித்த புதிய ஆலயத்தை அர்ச்சிப்பு செய்து 460வது திருவிழாவை கொடியேற்றி துவக்கி வைத்தார். நேற்று முன்தினம் மாலையில் திருச்சி புனித லூர்து அன்னை ஆலய அருட்தந்தை அருள் திருவிழா திருப்பலியை நடத்தி வைத்தார். தொடர்ந்து இரவு புனித செங்கோல் மாதாவின் சொரூபத்துடன் திருவிழா தேர்பவனி நடைபெற்றது.

தேர்பவனி பூர்வீக மீனவ கிராம மக்கள் வசிக்கும் சங்குமால் ஓலைக்குடா வரை வலம் வந்தது. ஓலைகுடா பங்குத்தந்தை ஜான்சன் பிரிட்டோ நேற்று காலையில் நிறைவு திருப்பலியுடன் திருவிழா கொடியை இறக்கி வைத்தார். இதில் ராமநாதபுரம் வட்டார அதிபர் அருட்பணி சிங்கராயர், பங்கு உதவி பங்குதந்தை பாரதி, ஓலைக்குடா பங்கு இறைமக்கள், தீவு அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொண்டி அருகில் உள்ள காரங்காடு கிராமத்தில் தூய செங்கோல் மாதா திருவிழா கடந்த ஜூலை 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவானது நேற்று ராஜசிங்கமங்கலம் மறைவட்ட அதிபர் அருட்தந்தை தேவசகாயம் தலைமையில் பங்குத்தந்தை ரெமிஜியஸ், சம்பை பங்கு தந்தையர்கள் செல்வராஜ், பாக்கியராஜ் அருள்தந்தை இரெட்சனியதாஸ், அருள் தந்தை அமலதாஸ், அருள் தந்தை பாலா தொண்டி பங்குத்தந்தை வியாகுல அமிர்தராஜ், முத்துப்பட்டினம் பங்குத்தந்தை அமல்ராஜ், குருமிலாங்குடி பங்குத்தந்தை ஜேம்ஸ் ராஜா ஆகியோர் திருவிழா சிறப்பு திருப்பலியை நடத்தினர்.

பிறகு தூய செங்கோல் மாதா சொரூபம் தாங்கிய தேர்பவனி நடைபெற்றது. அதில் முதல் தேரில் புனித செபஸ்தியார், இரண்டாம் தேரில் புனித சவேரியார், மூன்றாம் தேரில் புனித செங்கோல் அன்னையும் இருந்தனர். கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தனர். இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் அருள் சகோதரிகள், அருட் சகோதரர்கள் கலந்து கொண்டனர். காலையில் பெருவிழா சிறப்பு திருப்பலி சிவகங்கை வியான்னி அருள்பணி மைய இயக்குனர் அருள்பணி செபஸ்தியான் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து தேர்ப்பவனியும், கொடி இறக்கமும் நடைபெற்றது.

 

Tags : Rameswaram ,Thondi Sengol Mata Temple ,Therbhavani ,Christians ,Sengol Mata Temple ,Thondi, Rameswaram ,Sudukattanpatti, Rameswaram… ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...