அரியலூர், ஆக.1: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ரேஷன் அரிசி கடத்திய இளைஞர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். ஜெயங்கொண்டம் பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் குடிமைப் பொருள் குற்ற புலனாய்வு காவல் உதவி ஆய்வாளர் செல்வகுமார் தலைமையிலான காவல் துறையினர் நேற்று முன்தினம் இரவு சின்னவளையம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வைக்கோல் ஏற்றி வந்த லோடு ஆட்டோவை மறித்து சோதனை செய்ததில், 1150 கிலோ பொது விநியோக திட்ட ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவர் செந்துறை அருகேயுள்ள நாகல்குழி கிராமத்தைச் ரஞ்சித் (31) என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் ரஞ்சித்தை கைது செய்து, வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
