சேந்தமங்கலம், ஆக.1: எருமப்பட்டி வட்டாரத்தில் சம்பங்கி பூவின் விலை உயர்ந்து, கிலோ ரூ.220க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான நவலடிப்பட்டி, அலங்காநத்தம், பொட்டிரெட்டிப்பட்டி, காவக்காரன்பட்டி, முத்துகாப்பட்டி, பவித்திரம் கோம்பை, பொன்னேரி பவித்திரம் புதூர், பழையபாளையம், போடிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பரவலாக சம்பங்கி சாகுபடி செய்துள்ளனர்.
கொல்லிமலை அடிவாரத்தில் விளையும் பூக்கள் நன்கு திரட்சியாக, மணம் மிகுந்திருப்பதால் வெளி மாவட்ட வியாபாரிகள் அதிகளவில் வந்து வாங்கிச் செல்கின்றனர். மேலும், இப்பகுதி விவசாயிகள் கூலி ஆட்களை வைத்து பூக்களை பறித்து நாமக்கல், ராசிபுரம், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சந்தைகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். எருமப்பட்டி பகுதியில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. ஆடி மாதம் கோயில் விழாக்களை முன்னிட்டு பூக்களின் தேவையும் அதிகரித்துள்ளது.
