நாமகிரிப்பேட்டை பகுதிகளில் சாலையோரம் வைத்து காஸ் சிலிண்டர் சப்ளை: கூடுதலாக ரூ.30 வசூலிப்பதாக புகார்

 

நாமகிரிப்பேட்டை, ஜூலை 28: நாமகிரிப்பேட்டை சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்களை வீடுகளுக்கு நேரடியாக வழங்காமல், பொதுமக்களை ஒரு குறிப்பிட்ட இடங்களுக்கு வரவழைத்து விநியோகம் செய்வதுடன், கூடுதலாக ரூ.30 வசூலிப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் 1000க்கும் ேமற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் பொதுத்துறை காஸ் ஏஜென்சி நிறுவனத்தின் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்களை பயன்படுத்தி வருகின்றனர். நகர்ப்புற பகுதிகளில் பெரும்பாலும் நுகர்வோருக்கு, வீடுகளுக்கே நேரடியாக காஸ் சிலிண்டர் டெலிவரி செய்யப்படும். ஆனால் கிராமப்புறங்களில் வாரத்திற்கு 2 நாட்கள் மட்டுமே காஸ் சிலிண்டர் விநியோகம் செய்யப்படுகிறது.

மேலும், வீடுகள்தோறும் சென்று காஸ் சிலிண்டர் வழங்காமல், சாலையோரம் அல்லது பொது இடங்களில் வாகனத்தை நிறுத்தி, அங்கு நுகர்வோரை வரவழைத்து சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன. இதனால் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள், ஒரு நாள் வேலைக்கு விடுமுறை எடுத்து காஸ் சிலிண்டரை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.30 வரை கூடுதலாக டெலிவரி கட்டணமாக வசூலிப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சம்பந்தப்பட்ட காஸ் ஏஜென்சியிடம், கிராமப்புறங்களில் வீடுகள் தோறும் நேரடியாக காஸ் சிலிண்டர்களை வழங்க வேண்டும். மேலும், கூடுதல் கட்டணம் வசூலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related Stories: