குடிநீர் பிரச்னையை தீர்க்கக்கோரி காலிகுடங்களுடன் பெண்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு

 

நாமக்கல், ஜூலை 28: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், எருமப்பட்டி அருகேயுள்ள வரதராஜபுரத்தை சேர்ந்த பொதுமக்கள், காலிகுடங்களுடன் வந்து மனு அளித்தனர். இதுபற்றி அவர்கள் கூறியதாவது: கடந்த 6 மாதமாக எங்கள் பகுதியில் குடிநீர் பிரச்னை உள்ளது. இதனால் விலை கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டியுள்ளது. அனைத்து பகுதிக்கும் சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். கிராமங்களில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால் வெகு தொலைவு நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரவேண்டியுள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதே போல், திருச்செங்கோடு தாலுகா கருவேப்பம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்து, இலவச வீட்டு மனை பட்டா கேட்டு கலெக்டர் மதுபாலனிடம் கோரிக்கை மனு அளித்தனர். வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பேசி வீட்டு மனை பட்டா கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.

 

Related Stories: