மதுரை, ஆக. 1: மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, உதவி உபகரணங்கள், மருத்துவ உதவிகள் மற்றும் மறுவாழ்வு சேவைகள் பல்வேறு திட்டங்கள் மூலம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கடந்த 3 மாதங்களில் மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் பல்வேறு முக்கிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. பார்வையற்றோர் மற்றும் வாய், காது பேச இயலாத 102 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.13,800 மதிப்பிலான நவீன ஸ்மார்ட் போன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் அவர்கள் கல்வி, அரசு சேவைகள், வேலைவாய்ப்பு தகவல்கள் மற்றும் தகவல் தொடர்பு வசதிகளை எளிதாக பயன்படுத்தும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 14 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,14,500 மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 14 மாற்றுத்திறனாளிகளுக்கு மொத்தம் ரூ.15.29 லட்சம் மதிப்பில் செயற்கை கால்கள் பொருத்தப்பட்டு, அவர்கள் மீண்டும் தன்னம்பிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வகையில் மறுவாழ்வு உதவி வழங்கப்பட்டுள்ளது.
