விருதுநகர், ஆக.1: கூடுதல் பணி வழங்குவதை கண்டித்து ஊராட்சி அலுவலகத்தை தூய்மைக் பணியாளர்கள் முற்றுகையிட்டனர். விருதுநகர் அருகேயுள்ளது ரோசல்பட்டி ஊராட்சி. இங்கு 40 தூய்மைக் காவலர்கள் வீடு, வீடாக குப்பைகளைச் சேகரிக்கும் பணிக்காக உள்ளனர். ஆனால், இவர்களை ஊராட்சி நிர்வாகத்தினர், சாலையோர குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.
மேலும், குப்பைகளை கொண்டு செல்லும் பேட்டரி வண்டிக்கு தூய்மை காவலர்கள் வாரம் ரூ.20 தர வேண்டுமென கட்டாயப்படுத்தி வாங்கியுள்ளனர். மேலும், தரம் பிரித்து கொடுக்கப்பட்ட குப்பைகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை ஊராட்சி பணியாளர் விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனைக் கண்டித்து சிஐடியு-ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் சார்பில் தூய்மைக் காவலர்கள் ரோசல்பட்டி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
