ஆறுமுகநேரி, ஜூலை 31: புன்னக்காயல் தெற்குத்தெருவை சேர்ந்தவர் இட்டோ மகன் அலெக்சாண்டர். கப்பல் மாலுமியான இவருக்கும், இதே பகுதியை சேர்ந்த ஆஷா(31) என்பவருக்கும் கடந்த 2016ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் தம்பதியினர் இடையே பிரச்னை ஏற்பட்டு இருவரும் பிரிந்து வசித்து வருகின்றனர். ஆஷாவுடன் 2 மகன்களும், கணவர் குடும்பத்தினருடன் மகளும் வசிக்கின்றனர்.
இந்நிலையில் மகளுக்கு உடல்நிலை சரியில்லாததால், அவரை பார்க்க ஆஷா கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மாமனார் இட்டோ(70), கொழுந்தன் ரஸ்கின்(39) ஆகியோர் ஆஷாவை அவதூறாகப் பேசி தாக்கினர். மேலும் அவரது மகளையும் அடித்துள்ளனர். இதில் காயமடைந்த ஆஷா, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஆஷா கொடுத்த புகாரின் பேரில், ஆத்தூர் எஸ்எஸ்ஐ செல்வகுமார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
