×

திருவாரூர் மாவட்டத்தில் மக்கள் தொகை 2026 சுய கணக்கெடுப்பு இன்றுடன் நிறைவு

 

திருவாரூர், ஜூலை 31: திருவாரூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியினையொட்டி பொதுமக்கள் அனைவரும் தங்களை பற்றிய சுய விபரங்களை இன்றுக்குள் பூர்த்தி செய்யுமாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையத்தின் உத்தரவின்படி நாட்டின் 16வது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முதல் முறையாக முழுமையான டிஜிட்டல் முறையில் 2 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் முதல் கட்டமான வீட்டுப் பட்டியலிடல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்புப் பணிகள் கடந்த 17ந் தேதி முதல் துவங்கப்பட்டு அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 30ந் தேதி வரையில் மொத்தம் 45 நாட்கள் நடைபெறவுள்ளன. இதில், கடந்த 17ந் தேதி முதல் வரும் 31ந் தேதி வரையில் (15 நாட்கள்) பொதுமக்கள் இணையதளம் அல்லது கைப்பேசி செயலி வாயிலாக சுயக்கணக்கெடுப்பு மேற்கொள்ளலாம்.

அதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் 1ந் தேதி முதல் 30ந் தேதி வரை மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிகளுக்காக நியமிக்கப்பட்ட கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மூலம் நேரடி வீட்டுப் பட்டியலிடல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். 2ம் கட்டமாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பிப்ரவரி 2027 முதல் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிகளை சிறப்பாக செயல்படுத்துவதற்காக வருவாய் வட்டாட்சியர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் நகராட்சி ஆணையர்கள் நிலையில் 20 பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்து 12 ஹவுஸ் லிஸ்டிங் பிளாக்ஸ் அமைக்கப்பட்டு, ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பிற துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட 2 ஆயிரத்து 357 கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது அரசு திட்டமிடல், மக்கள் பிரதிநிதித்துவம், வளங்களின் சமமான பகிர்வு, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களைத் துல்லியமாக வடிவமைத்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசுப் பணிகளுக்கு அடிப்படையாக அமைகிறது. எனவே, பொதுமக்கள் அனைவரும் சுயக் கணக்கெடுப்பில் ஆர்வமுடன் பங்கேற்று விபரங்களை இன்றுக்குள் (31ந் தேதி) பூர்த்தி செய்யுமாறு கேட்டுகொள்ளப்படுவதுடன் நாளை முதல் (1ந் தேதி) முதல் கணக்கெடுப்பாளர்கள் தங்கள் வீடுகளுக்கு வருகை தரும்போது சரியான மற்றும் முழுமையான தகவல்களை வழங்கி, 2027ம் ஆண்டிற்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்த முழு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags : 2026 Population Census ,Tiruvarur district ,Tiruvarur ,Collector ,Mohanachandran ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...