×

தேன்கனிக்கோட்டை அருகே பயிர்களை சேதம் செய்த 2 யானைகள்: விவசாயிகள் கவலை

 

தேன்கனிக்கோட்டை, ஜூலை 31: தேன்கனிக்கோட்டை அருகே, கிரியனப்பள்ளியில் பயிர்களை சேதப்படுத்திய 2 யானைகளால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சகரகம் நொகனூர் வனப்பகுதியில், 10 யானைகள் உள்ளன. இந்த யானைகள் தனித்தனியாக பிரிந்து தினமும் உணவு, தண்ணீர் தேடி கிராம பகுதிகளில் புகுந்து தக்காளி, முட்டைகோஸ், பீன்ஸ் உள்ளிட்ட பயிர்களை நாசப்படுத்தி வருகிறது. நேற்று முன்தினம், ஆலஹள்ளி காட்டில் முகாமிட்டிருந்த 2 யானைகள், கிரியனப்பள்ளி கிராமம் அருகே சாலையில் சாவகாசமாக நடந்து சென்றன. இதை கண்டு, பொதுமக்கள் கூச்சலிட்டு விரட்டியதில், அருகில் உள்ள சாமந்தி தோட்டத்தில் புகுந்து, அங்கு பயிர்களை நாசம் செய்தன.

இதை அறிந்த கிராம மக்கள், தேன்கனிக்கோட்டை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், வனத்துறையினர் விரைந்து வந்து பட்டாசு வெடித்து யானைகளை விரட்டினர். அப்போது, தனியார் எஸ்டேட்டில் புகுந்த இரண்டு யானைகள் பூட்டப்பட்டிருந்த இரும்பு கேட்டை தும்பிக்கையால் உடைத்து, தள்ளி காட்டிற்குள் சென்றன. தொடர்ந்து யானைகள் கிராம பகுதியில் சுற்றி வருவதால், விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். யானைகள் நடமாட்டம் உள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags : Thenkanikottai ,Kiriyanapalli ,Noganur ,Thenkanikottai Vanachkaragam, Krishnagiri district ,
× RELATED டூவீலரில் இருந்து தவறி விழுந்து பெண் பலி