- ஆடி பெருக்கு திருவிழா
- கிருஷ்ணகிரி அணை
- கிருஷ்ணகிரி
- கிருஷ்ணகிரி மாவட்டம்
- மஞ்சமேடு
- Parur
- செக்கனம்பட்டி
- மாத்தூர்
கிருஷ்ணகிரி, ஆக.4: கிருஷ்ணகிரி அணையில் நடந்த ஆடிபெருக்கு விழாவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஆடிப்பெருக்கு விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கிருஷ்ணகிரி அணை, பாரூர் அருகே உள்ள மஞ்சமேடு, மத்தூர் அருகே உள்ள சேக்கனாம்பட்டி, போச்சம்பள்ளி அருகே உள்ள வலச கவுண்டனூர், வேப்பனஹள்ளி அருகே உள்ள தீர்த்தம், ஊத்தங்கரை அருகே உள்ள அனுமன்தீர்த்தம் ஆகிய இடங்களில் ஏராளமான மக்கள் குவிந்து புனித நீராடி, கோயில்களில் வழிபாடு நடத்தினர். கிருஷ்ணகிரி அணையில் உள்ள செல்லியம்மன் கோயில், அவதானப்பட்டி மாரியம்மன் கோயில், பச்சிகானப்பள்ளி மாரியம்மன் கோயில் மற்றும் அணையில் உள்ள மார்க்கண்டேயன் சுவாமி கோயில்களில் சிறப்பு பூஜைகள், அணையில் சுவாமி வீதி உலா நடந்தது. மார்க்கண்டேயன் சுவாமி கோயில் எதிரில் உள்ள பசு மாட்டு சிலையின் வாயில் இருந்து கொட்டும் தண்ணீரில், ஏராளமான பக்தர்கள் குளித்து, சாமி தரிசனம் செய்தனர்.
கிருஷ்ணகிரி அணையில் உள்ள செல்லியம்மன் சுவாமி சிலை முன்பு, பேய் ஓட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு, தங்களது தலைக்கு மேல் இருகைகளையும் உயர்த்தி கொள்ள, பூசாரி அவர்களை சாட்டையால் அடித்தார். இவ்வாறு செய்வதன் மூலம் அவர்களை பிடித்த பேய் விலகி ஓடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஆடிப்பெருக்கு விழாவினையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி மாவட்டங்களில் இருந்தும், அண்டைய மாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும், ஏராளமானோர் கிருஷ்ணகிரி அணையில் குடும்பத்தினருடன் குவிந்தனர். நேற்று சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அணை பூங்காவுக்கு வந்து, தங்கள் குழந்தைகளை சறுக்கு பலகை, ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்களில் விளையாட விட்டு மகிழ்ந்தனர்.
அணையையும், பூங்காவையும் சுற்றி பார்த்து விட்டு, அணையின் மேல்பகுதியில் உள்ள மீன் கடைகளுக்கு குடும்பத்துடன் சென்று, மீன் உணவுகளை சாப்பிட்டு மகிழ்ந்தனர். மேலும், கிருஷ்ணகிரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அவதானப்பட்டி சிறுவர் பூங்காவிற்கு சென்று விளையாடி மகிழ்ந்ததுடன், அங்குள்ள படகு இல்லத்திற்கு சென்று, படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். கிருஷ்ணகிரி அணை மற்றும் அவதானப்பட்டி சிறுவர் பூங்காவில் ஏராளமானோர் கூடியதால், அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க மாவட்ட எஸ்பி தங்கதுரை உத்தரவின் பேரில், 100க்கும் மேற்பட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர் மற்றும் 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சிறப்பு பஸ்கள் இயக்கம்
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, தென்பெண்ணை ஆற்றில் குளிக்க ஏதுவாக, கிருஷ்ணகிரி அணையில் இருந்து நேற்று முன்தினம் மாலை முதல் 950 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் பொதுமக்களும், பக்தர்களும் ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். மேலும், அணை பூங்காவுக்கு கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள், தங்கள் வாகனங்களை நிறுத்த வசதியாக அணையின் நுழைவு வாயில் அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதே போல், கிருஷ்ணகிரி மற்றும் காவேரிப்பட்டணம் பகுதியில் இருந்து அணைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்பி ஆய்வு
ஊத்தங்கரை அடுத்த அனுமன்தீர்த்தம் பகுதிகளில் உள்ள தென்பெண்ணை ஆற்றுப்படுகையில், ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட புதுமண தம்பதிகள், பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர். ஆற்றில் சூடம் ஏற்றி வழிபாடு நடத்தினர். புதுமண தம்பதிகள் திருமணத்தின் போது அணிவித்த மாலைகளை தண்ணீரில் விட்டு, தாலி கயிறுகளை மாற்றிக் கொண்டனர். இதனையொட்டி, 50க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இப்பணிகளை மாவட்ட எஸ்பி அனிதா நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். பின்னர், ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருடன் ஊத்தங்கரை டிஎஸ்பி ராமமூர்த்தி உள்ளிட்டோரும் வழிபாடு செய்தனர்.
