×

பயிர்களுக்கு களைக்கொல்லி, நுண்ணூட்டச்சத்துகள் தெளிக்க விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் ட்ரோன்கள் கிடைக்குமா?

 

பெரம்பலூர், ஜூலை 31: பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைந்த நேரத்தில் அதிக பரப்பில் களைக்கொல்லி, பூச்சிக் கொல்லி தெளிக்கவும், நுண்ணூட்டச் சத்துக் கலவையினை தெளிக்கவும், குறைந்த வாடகைக்கும் பாதுகாப்பிற்காகவும் ட்ரோன்களை பயன்படுத்தி வருகின்றனர். இதை அரசு வேளாண் துறையில் கொண்டு வந்தால் விவசாயிகளுக்கு பயன்உள்ளதாக அமையும். ஆனால் மாவட்ட நிர்வாகத்திடம் இல்லை. பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழகத்திலேயே மிக அதிகபட்சமாக மக்காச் சோளம், பருத்தி, சின்ன வெங்காயம் ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருவதோடு தொடர்ந்து 30 ஆண்டுகளாக அதிகப்படியான சாகுபடியில் மாநிலத்தில் முதலிடம் பெற்றுவருகின்றது. குறிப்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 2.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மானாவாரி பயிர்கள் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இவை தவிர ஆற்றுப் பாசன, ஏரிப் பாசன பகுதிகளில் நெல், மஞ்சள், மரவள்ளி, வாழை போன்ற நஞ்சை பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக மக்காச்சோளம், பருத்தி போன்ற பயிர்களில் படைப் புழு தாக்கம் காணப்பட்டது. இதற்காக ஆளுயரத்திற்கு வளர்ந்த பருத்தி வயல்களில் புகுந்து பூச்சிக்கொல்லி மருந்துகளை பவர் ஸ்பிரேயர் கொண்டு தெளித்த மூன்று, நான்கு விவசாயிகள் பூச்சிக் கொல்லி மருந்தின் நெடி தாங்க முடியாமல் மயக்கம் அடைந்து அதிர்ச்சிகரமாக உயிரையும் இழந்தனர். இதனால் வயல்களுக்கு பூச்சி மருந்து தெளிக்கும் போது உயிர் பயம் இருந்துவருகிறது. இதற்குத் தீர்வாக தற்போது விவசாயிகளுக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் திட்டம் மிகப்பெரிய வரப் பிரசாதமாக அமைந்து வருகிறது. குறிப்பாக பாதுகாப்புத் துறைகளில் வேவுபார்க்க தயாரித்துப் பயன்படுத்தப்பட்டு வந்த ட்ரோன்கள் காலப்போக்கில் கல்யாண நிகழ்ச்சிகளுக்கும், கும்பாபிஷேகம் உள்ளிட்ட திருவிழா நிகழ்ச்சிகளுக்கும், மக்கள் கூட்டத்தைக் கண்காணித்து படம்பிடிக்க கேமராவை இணைத்து ட்ரோன்கள் மூலம் படம் பிடிக்கும் நிகழ்ச்சிகள் சகஜம் ஆகிவிட்டன.

இந்த ட்ரோன்களை கடந்த சில ஆண்டுகளாக பல ஏக்கர், ஹெக்டேர் பரப்பளவுகளில் பயிரிடப் பட்டுள்ள பயிர்களுக்கு நுண்ணூட்டச் சத்தினை தெளிக்கவும், பூச்சிக்கொல்லி, களைக் கொல்லி மருந்தினைத் தெளிக்கவும், புற்களை அழிக்கக்கூடிய மருந்துகளைத் தெளிக்கவும் வெகுவாக பயன் படுத்தப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பல ஹெக்டேர் கணக்கில் விளைநிலங்களை கொண்டுள்ள பெரு விவசாயிகள் மட்டுமே பயன் படுத்தி வந்த இந்த ட்ரோன்கள் தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் ஒன்றிரண்டு ஏக்கர் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கும் பயன் தரக் கூடிய வகையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

சாதாரணமாக பவர் ஸ்பிரே கொண்டு ஒவ்வொரு முறையும் வாடகைக் கட்டணம் செலுத்தி ஒரு ஏக்கருக்கு 10 முறை பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்க ஆயிரக் கணக்கில் செலவு செய்து வரும் விவசாயிகளுக்கு, ரூ.600க்கு, ஒரே முறையில் ஒரு ஏக்கர் முழுக்க பூச்சிக்கொல்லி மருந்தினை தெளிக்கும் வசதியை இந்த ட்ரோன் ஏற்படுத்தி தருகிறது. இதனால் ஒரு ஏக்கருக்கு ரூ.600 செலவில், நேரத்தையும், பணத்தையும், மிச்சப் படுத்தி பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் ட்ரோன்கள் மூலம் மருந்துகளையும், நுண்ணூட்ட சத்துக்களையும் தெளிக்கும் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்துகளில் இருந்து விவசாயிகளுக்கும், பவர் ஸ்பிரே மூலம் மருந்து தெளிக்கும் தொழிலாளிகளுக்கும் எந்தவிதமான உயிர் பயமும் ஏற்படப்போவதில்லை. அதே சமயம் ஒருஅடி நிலம்கூட விடுபடாமல் வானில் பறந்தபடி நுண்ணூட்டச் சத்துக்களை மண்ணின் மீது பயிர்கள் மீது, மழைபோல் தூவும் இந்த ட்ரோன்களுக்கு புதிய வரவேற்பு கிடைத் துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : Perambalur ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...