பல்லடம்,ஜூலை31: விநாயகர் சிலைகள் வைக்க கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்து முன்னேற்றக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. திருப்பூர் மாவட்ட இந்து முன்னேற்றக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் பல்லடத்தில் மாநிலச் செயலாளர் டாக்டர் ஹரிகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடைபெற்றது. திருப்பூர் வடக்கு மாவட்டச்செயலாளர் பொன்.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். பல்லடம் நகரத் தலைவர் விஷ்ணு வரவேற்றார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் இந்து முன்னேற்றக் கழகம் சார்பில் 14ம் ஆண்டு விழாவையொட்டி 501 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து கொண்டாடுவது, விநாயகர் சிலை வைப்பதற்கும் மற்றும் ஊர்வலத்துக்கும் இடையூறு ஏற்படாத வகையில் அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
புதிதாக விநாயகர் சிலைகள் வைக்க கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும், சதுர்த்தி அன்று அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும். அனைத்து கோயில்களிலும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். அதிக வருமாணம் வரும் கோவில்களில் ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் பூஜை வழிபாட்டு முறைகள் பற்றிய சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஒரு கால பூஜை நடைபெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். சிதிலமடைந்துள்ள கோவில்களை அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து புனரமைக்க வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
