திருப்பூர், ஆக 3: ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக நேற்று ஞாயிற்றுக்கிழமை வாராந்திர விடுமுறை, இன்று உள்ளூர் விடுமுறை என அடுத்தடுத்து தொடர் விடுமுறை நாட்கள் வந்ததால், திருப்பூரில் தங்கி பணியாற்றி வரும் வெளிமாவட்ட மக்கள் மற்றும் தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
இதன் காரணமாக, திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று பயணிகளின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாகக் காணப்பட்டது. பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைக் குறைக்கவும் திருப்பூர் மாநகரில் உள்ள 3 முக்கிய பேருந்து நிலையங்களில் இருந்தும் கடந்த வெள்ளிக்கிழமை முதலே மொத்தம் 95 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. பேருந்து நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பிற்காகப் போலீசாரும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
