கோபால்பட்டி, ஜூலை 31: சாணார்பட்டி சுற்றுவட்டார பகுதியில் அதிகளவு பயிரிடப்பட்டுள்ள வாடாமல்லி பூக்கள் போதிய தண்ணீர் வசதி இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சாணார்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட ராஜகாபட்டி, புகையிலைப்பட்டி, மடூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வாடாமல்லி பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பூக்கள் கேரளாவில் நடைபெறும் ஓணம் பண்டிகைக்காக அதிகம் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு பருவமழை சரியாக பெய்யாததால் குறைந்த அளவே வாடாமல்லி பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. தற்போதும் அதிகமாக பூத்துள்ள பூக்கள் அறுவடைக்கு தயாராக உள்ளது. இப்பகுதியில் குறைந்த அளவே தண்ணீர் உள்ள நிலையில், விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்பகுதியில் இரவு நேரங்களில் நான்கு மணி நேரமும், பகல் நேரங்களில் 8 மணி நேரம் மட்டுமே முன்முனை மின்சாரம் தரப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர். இதனால் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து இரவு மற்றும் பகல் நேரங்களில் விவசாயிகளுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என்று இப்பகுதிமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
