திண்டுக்கல், ஜூலை 31: திண்டுக்கல்லில் அதிக விலைக்கு உரங்கள் விற்கப்படுகிறது தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனர். திண்டுக்கல்லில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். டிஆர்ஓ ஜெயபாரதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாகேந்திரன் தோட்டக்கலை துறை துணை இயக்குனர் காயத்ரி, வேளாண்மை துறை துணை இயக்குனர் உமா, மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் ராகவ் பாலாஜி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில்விவசாயி நல்லுச்சாமி பேசுகையில்: தற்போது கடும் வறட்சி உள்ளது, ஆகையால் கால்நடைகளுக்கு வைக்கோல் மானியத்தில் வழங்க வேண்டும். கலெக்டர்: கால்நடை தீவனம் வளர்ப்பதற்காக திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. விவசாயி சங்கரசுப்பு: ரெட்டியபட்டி அருகே சிறுமலை அடிவாரப்பகுதி செல்ல ரோடு அமைக்க வேண்டும். மேலும், சிறுமலை இருந்து காட்டுமாடு, காட்டுப் பன்றிகள் விவசாயத்தை சேதப்படுத்துகிறது, இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலெக்டர் துர்கா மூர்த்தி: வனத்துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயி ராஜேந்திரன்: விளாம்பட்டியில் விவசாயிகள் செல்லும் ரோட்டில் ஆக்கிரமிப்பு எடுக்கப்பட்டு, ரோடு அமைக்க வேண்டும். ஜோசப் செல்வராஜ்: ஏ.வெள்ளோடு அணையில் இருந்து 11 குளங்கள் நிரம்பி குடகனாற்றுக்கு தண்ணீர் வரும் கால்வாயை சீரமைக்க வேண்டும். கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். விவசாயி பெருமாள்: கோவிலூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் உரம் அதிக விலைக்கு விற்கப்படுகிறது, இதனை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் குளங்களில் தூர் வாரும் வண்டல் மண்களை அருகில் உள்ள விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். கலெக்டர் துர்கா மூர்த்தி: இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் தொடர்ந்தது.
