×

மேகதாது அணை விவகாரம் ஒன்றிய அமைச்சர் கருத்துக்களை திரும்பப்பெற வேண்டும்

 

திருவாரூர், ஜுலை 30: மேகதாது அணை குறித்து நாடாளுமன்ற மேலவையில் ஒன்றிய அமைச்சர் தெரிவித்த கருத்துக்கள் தவறானது என்பதால் அதனை திரும்ப பெற வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அதன் மாநில பொது செயலாளர் மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடந்த 27ந் தேதி நாடாளுமன்ற மேலவையில் ஒன்றிய அமைச்சர் மேகதாது குறித்தான கேள்வியில் கர்நாடகாவிற்கு சாதகமான பதிலை கொடுத்துள்ளார். 2018 பிப்ரவரி 16ந் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, மேல் பாசன மாநிலங்கள் காவேரியின் குறுக்கே எந்த கட்டுமானத்தையும் மேற்கொள்ள கீழ்பாசன மாநிலங்களான தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரியில் ஒப்புதல் பெற வேண்டும் என்று எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை என்று தெரிவிக்கிறார்.

அதாவது கர்நாடகம் தொடர்ந்து எழுப்பி வரும் மேகதாது அணையை கட்டுவதற்கு அதற்கு அதிகாரம் உள்ளது கீழ்மாநிங்களை கேட்கத் தேவையில்லை என்று சட்டம் முறைமையின் படி அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டத்தில் சொல்லியது மிகப்பெரிய தவறு. சட்டம், ஒரு புறம் இருந்தாலும் தேசிய ஒருமைப்பாட்டை கவனத்தில் கொண்டு நாட்டின் மீது அக்கறை கொண்டு வெளிப்பட்ட கருத்தாக இது இல்லை. 2007ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பில் உள்ள முக்கியமான ஒரு அம்சத்தை விடுத்து, 2018ல் உச்சநீதிமன்றம் அளித்த பெங்களூரு குடிநீருக்காக 14.75 டிஎம்சி.க்கான ஒரு திருத்தத்தை மட்டுமே மேற்கோள் காட்டி இதில் வேறு எதுவும் இல்லை என அமைச்சர் கூறுகிறார். அந்த தீர்ப்பில், இதைத் தவிர மற்ற அத்தனை அம்சங்களும் நடுவர் மன்றம் கொடுத்த தீர்ப்புகள் தான் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளதை ஏன் அமைச்சர் மறுத்தார்.

அதுவும் நாடாளுமன்ற கூட்டத்தில் கூறியது என்பது தவறு. எந்த ஒரு மாநிலமும் அளிக்கப்பட்ட நீர் பங்கிட்டின்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறுகிறது. அதாவது 2018 உச்ச நீதிமன்ற உத்தரவின் படி பிற மாநிலங்களின் ஒப்புதல் கட்டாயமாக்கப்படவில்லை என அமைச்சர் கூறுகிறார். திருத்தப்பட்ட 2018 உத்தரவு என்பது.. பெங்களூர் குடிநீருக்கு நீர் வேண்டும் என கர்நாடகம் முறையிட்ட அடிப்படையிலேயே தான் 177.75 டி.எம். சி என தமிழக நீர்ப்பங்கீட்டில் குறைக்கப்பட்டு 14.25 டி.எம்.சி. குடிநீருக்காக ஒதுக்கீடு செய்தது. இது மட்டுமே தீர்ப்பில் மாற்றம். ஆனால் அமைச்சர் இந்த நீர் ஒதுக்கீட்டை மீறாத வகையில் கர்நாடகாவின் எல்லைக்குள்ளே எந்த கட்டுமானமும் மேற்கொள்ளலாம் என கூறுகிறார்.

ஆனால் காவிரி நதி நீர் ஆணையம் மற்றும் மேலாண்மை ஆணையம் ஆகியவற்றின் ஆய்வு மற்றும் அனுமதி இல்லாமல் காவிரியின் குறுக்கே புதிய நீர் கட்டமைப்புகளை அமைக்க கூடாது என நடுவர் மன்ற தீர்ப்பில் உள்ளது. ஒரு அமைச்சர் நாடாளுமன்ற கூட்டத்தில் பொறுப்பாக பேச வேண்டும் என்பதை விடுத்து இப்படி பேசுவது மீண்டும் பதட்டத்தை கர்நாடகம் தமிழகத்திற்கு இடையே ஏற்படுத்தி உள்ளது. எனவே தவறான கருத்துக்களை நாடாளுமன்றத்தில் அறிவித்ததை அமைச்சர் திரும்ப பெற வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வலியுறுத்துகிறோம். இவ்வாறு மாசிலாமணி தெரிவித்துள்ளார்.

Tags : EU ,minister ,Meghadad Dam Affairs ,Thiruvarur ,Tamil Nadu Farmers' Association ,Union Minister ,Megadadu Dam ,Parliament House ,Secretary General ,
× RELATED கிரிமினல் வழக்குகளில் சிக்காமல்...