×

கலசபாக்கம் அருகே தொழிலாளி வீட்டில் 18 சவரன் நகைகள், ரூ.1 லட்சம் திருடிய கணவன், மனைவி கைது: வெளியே ஆட்கள் வருவதை கண்காணித்த தாயும் சிக்கினார்

கலசபாக்கம், ஜூலை 30: கலசபாக்கம் அருகே பட்டப்பகலில் தொழிலாளி வீட்டில் 18 சவரன், பணம் திருடிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியம் வடகருங்காலிப்பாடி கிராமத்தை சேர்ந்த குப்பன்(48). இவரது மனைவி உண்ணாமலை. இருவரும் கூலிதொழிலாளிகள். கடந்த 23ம் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். பின்னர் மாலையில் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோ கதவு திறந்த நிலையில் பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 21 சவரன் நகை, ரூ.1 லட்சத்தை மர்ம நபரகள் திருடிச்சென்றிருந்தது தெரியவந்தது.

உடனே இதுகுறித்து கலசபாக்கம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டை சோதனை நடத்தி அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் மர்ம நபர்களின் தடயங்களை சேகரித்து சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் நாயுடு மங்கலம் ரயில்வே கேட் பகுதியில் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனை நடத்தினர். இதில் ரூ.50,500 ரொக்கம் மற்றும் 18 சவரன் தங்க நகைகளை போலீசார் கைப்பற்றினர்.

காரில் இருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியோது வடகருங்காலிப்பாடி கிராமத்தைச் சேர்ந்த இந்திரன் என்பவரது மகன் நம்மாழ்வார்(36) என்பது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், குப்பன் வீட்டில் 18 சவரன் தங்க நகைகளை திருடியதாகவும், அதற்கு தன்னுடைய தாயார் இந்திராணி, வீட்டின் வெளியே கண்காணித்து தகவல் சொல்லி திருடிச் சென்றது, அதை தனது மனைவி சத்யா(33) உதவியுடன் நகையை மறைத்து வைத்திருந்ததாக தெரிவித்தார். இதன்பேரில் நம்மாழ்வார், அவரது தாயார் இந்திராணி மற்றும் மனைவி சத்யா ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து நேற்று கலசபாக்கம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags : Kalasapakkam ,Kuppan ,Vadakarungalipadi village ,Durinchapuram ,Tiruvannamalai district ,
× RELATED ஆரணி அருகே பரபரப்பு; பச்சிளம்...