சோழவந்தான், ஜூலை 30: சோழவந்தான் அருகே மேலக்காலில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதனை சரிசெய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. சோழவந்தான் அருகேயுள்ளது மேலக்கால் கிராமம். இங்கு ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊருக்கு கீழமாத்தூர் மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.
இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் பாடங்களை படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கடும் புழுக்கத்தால் பொதுமக்கள் சரிவர தூங்காமல் தவித்து வருகின்றனர். காலை நேரத்தில் ஏற்படும் மின்தடையால் உணவு தயாரிக்க முடியாமல் பெண்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். பல நேரங்களில் குறைந்த மின்னழுத்தத்தால் பேன், மிக்ஸி உள்ளிட்ட மின் சாதனங்கள் பழுதடைகின்றன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: இப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் மட்டுமன்றி மாணவ, மாணவிகளும் அவதியுறுகின்றனர்.
இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளும் சிரமமடைகின்றனர். இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டால் உரிய பதில் கிடைப்பதில்லை. கடந்த மாதம் இப்பகுதிக்கு எம்எல்ஏ கருப்பையா ஆய்வுக்கு வந்தபோதும் மின்தடை ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக மின்வாரிய அதிகாதிகளை தொடர்பு கொண்ட எம்எல்ஏ, இப்பகுதிக்கு தடையின்றி மின் விநியோகம் செய்ய வலியுறுத்தினார். ஆனாலும் இப்பகுதியில் மின்தடை தொடர்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் நலன் கருதி இப்பகுதிக்கு சீராக மின்விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
