சென்னை: முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பெயர் பொறித்த கல்வெட்டை மறைத்து மூடப்பட்டிருந்த வலையை சேதப்படுத்தியாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி திமுக முன்னாள் எம்எல்ஏ தொடர்ந்த வழக்கில் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை அடுத்த நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த திமுக ஆட்சியில் இத்திட்டத்தின் 2வது பெரிய அலகை கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரியில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதற்கான கல்வெட்டில் அவரது பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, கடந்த ஜூலை 6ம் தேதி நெம்மேலிக்கு சென்று இத்திட்டத்தை தமிழக முதல்வர் விஜய் பார்வையிட்டார். அப்போது, பராமரிப்பு பணி நடப்பதாக கூறி, மு.க.ஸ்டாலின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு வலையால் மறைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வலையை சேதப்படுத்தி பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியதாக திருப்போரூர் தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ எல்.இதயவர்மன் உள்ளிட்ட இருவர் மீது மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து, தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி இதயவர்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடரப்பட்டுள்ள இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் கேட்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுவிற்கு காவல்துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 3ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
