முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் வங்கி கணக்கை முடக்குவதற்கு போலீசாருக்கு அதிகாரமில்லை: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை: முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் வங்கி கணக்கை முடக்க போலீசாருக்கு அதிகாரமில்லை, என்று கந்துவட்டி குற்றச்சாட்டில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவையை சேர்ந்த மருத்துவர் தம்பதி, தங்களது மருத்துவமனை கட்டிடத்தை அடமானமாக வைத்து எல்ஐசி வீட்டு வசதி நிதி நிறுவனத்தில் வீட்டு கடன் பெற்றிருந்தனர். கொரோனா கால நிதி நெருக்கடி காரணமாக கடனை முழுமையாக செலுத்த முடியாததால், 4 கோடி ரூபாய்க்கு ஒருமுறை தீர்வாக கடனை அடைக்க ஒப்பந்தம் செய்தனர்.

அந்த தொகையை செலுத்துவதற்காக தனியார் பைனான்சியர்கள் கார்த்திகா கனகராஜ் மற்றும் மகாராஜா ஆகியோரிடமிருந்து 3.94 கோடி ரூபாய் கடன் பெற்றிருந்தனர். ஆனால், திடீரென அடமான சொத்தை அபகரிக்கும் நோக்கில் அதிக வட்டி கோரி அவர்கள் மிரட்டியதால், மருத்துவர் தம்பதி, கோவை மாநகர காவல் ஆணையர் மற்றும் கோவை ஆர்.எஸ்.புரம் காவல் ஆய்வாளரிடம் புகார் அளித்தனர். புகார் மீது வழக்குப்பதிவு செய்யாததால், மருத்துவர் தம்பதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் உதயகுமாருக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, மருத்துவர்கள் கொடுத்த புகாரின் பேரில் தனியார் பைனான்சியர்கள் கார்த்திகா கனகராஜ் மற்றும் மகாராஜா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்காமல், மருத்துவர்களின் வங்கி கணக்கை போலீசார் முடக்கியுள்ளனர். ஆன்லைன் மோசடி வழக்குகளை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் வங்கிக் கணக்கை முடக்க காவல்துறைக்கு அதிகாரம் இல்லை.

இது தொடர்பாக காவல்துறை சுற்றறிக்கையும், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளும் உள்ளதை கோவை மாநகர காவல் துறையினர் மதிக்காமல் சொத்தை அபகரிக்க நினைக்கும் கந்து வட்டிக்காரர்களுக்கு துணையாக செயல்படுகின்றனர். கணக்கு முடக்கப்பட்டதால் கடனை அடைக்க மேற்கொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாமல் உள்ளது என்று வாதிட்டார். அரசுத் தரப்பில், தனியார் பைனான்சியர்கள் நலனை பாதுகாக்கும் நோக்கில்தான் வங்கி கணக்கை முடக்க அறிவுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ஆன்லைன் மோசடி விவகாரங்களைத் தவிர, பிற வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் வங்கிக் கணக்கை முடக்கும்படி போலீசார் வங்கிகளுக்கு உத்தரவிட முடியாது. அதே நேரத்தில் பைனான்சியர்களின் நலனும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, மனுதாரர்கள் வங்கி கணக்கை உடனடியாக சம்மந்தப்பட்ட வங்கி இயக்க வேண்டும்.

கடனை அடைப்பதற்கான ஒப்பந்தம் முடிந்தவுடன் அசல் ஆவணங்களை நேரடியாக ரெப்கோ வங்கியிடம் எல்ஐசி நிறுவனம் ஒப்படைக்க வேண்டும். அதன் பின்னர் ரெப்கோ வங்கி கடனை வழங்கி, அந்தத் தொகையை கார்த்திகா கனகராஜ் மற்றும் மகாராஜா ஆகிய பைனான்சியர்கள் முன்னிலையில் மருத்துவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Related Stories: