சென்னை: டாஸ்மாக் கடைகள் தனியார்மயமாக்க கூட்டத்தொடரிலேயே சட்டத்திருத்தம் கொண்டுவர தவெக அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான விற்பனையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், மதுபானக் கடைகளை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
இதற்காக, வரவிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே மதுவிலக்கு மற்றும் கலால் சட்டங்களில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சட்டத்திருத்தங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைத்த பிறகு, மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும், முதற்கட்டமாக மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை தனியார் நிறுவனங்கள் அல்லது உரிமம் பெற்ற தனிநபர்கள் மூலம் இயக்கும் நடைமுறையை அறிமுகப்படுத்த அரசு பரிசீலித்து வருகிறது.
பின்னர் அதன் செயல்திறனை மதிப்பீடு செய்து, மாநிலம் முழுவதும் விரிவுபடுத்துவது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத்தில் மதுபான விற்பனையை முழுமையாக டாஸ்மாக் நிறுவனமே மேற்கொண்டு வந்த நிலையில், இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்தால், 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தனியார் முறையில் மதுபான விற்பனையாகும்.
