முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகாரை தொடர்ந்து கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்திய வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு: தினமும் 2 மையம் என 7 நாட்கள் நடக்கிறது

சென்னை: முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகாரை தொடர்ந்து, கொளத்தூர் தொகுதியில் 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி தொடங்கியது. ஒரு நாளுக்கு 2 மையம் என 7 நாட்கள் இந்த பணி நடைபெறுகிறது. சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடந்த 2011, 2016 மற்றும் 2021 ஆகிய 3 சட்டமன்ற தேர்தலில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்திருந்தார்.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவை விட 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். அவரது இந்த தோல்வி தமிழக மக்களை மட்டுமல்ல இந்திய அரசியலையே திரும்பி பார்க்க வைத்தது. இந்த நிலையில், கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட 14 வாக்குச்சாவடிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் மு.க.ஸ்டாலின் கோரிக்கை மனு அளித்திருந்தார்.

அவருடைய கோரிக்கையை ஏற்று, தேர்தல் முடிந்த பின்னர் ‘சீல்’ வைக்கப்பட்டு சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேற்று முதல் அதிகாரப்பூர்வமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இதில், 14 வாக்குச்சாவடிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணியை தேர்தல் ஆணையம் நேற்று தொடங்கியது. இந்த பணி, கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலராக இருந்த சாந்தி தலைமையிலும், சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும், சென்னை மாநகராட்சி கமிஷனருமான சமீரன் முன்னிலையிலும் நடைபெற்றன.

இதில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான சேகர்பாபு, மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ எம்பி., உள்ளிட்ட நிர்வாகிகளும், தவெக தரப்பில் வி.எஸ்.தீனா, வழக்கறிஞர் அருண் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடி மையங்களான சென்னை கொளத்தூர் செல்வி நகரில் உள்ள எவர்வின் குளோபல் மழலையர் பள்ளி (வாக்குச்சாவடி எண் 1 மற்றும் 4),

ஸ்ரீனிவாச நகர் சென்னை தொடக்கப்பள்ளி (17), டான் போஸ்கோ பள்ளி (28, 32) பள்ளிச்சாலை சென்னை உயர்நிலைப் பள்ளி (75, 78, 79, 84 மற்றும் 87), பேப்பர்மில்ஸ் சாலை டான் போஸ்கோ பள்ளி (112, 122), ராகன் தெருவில் உள்ள சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளி (157), திரு.வி.க.நகர் அங்கன்வாடி (170) ஆகிய 14 வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் ஆணையத்திடம் சுட்டிக்காட்டியிருந்தார். அந்த வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேற்று முதல் ஆய்வு செய்யும் பணி தொடங்கியது.

இந்த 14 வாக்குச்சாவடிகளிலும் வாக்களிக்க இருந்த 11 ஆயிரத்து 691 வாக்காளர்களில் அன்றைய தினம் பதிவான 10 ஆயிரத்து 174 வாக்குகள் சரிபார்க்கப்பட உள்ளன. நேற்று வாக்குச்சாவடி மையங்களான 1 மற்றும் 4ல் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்துகொள்ளும் வி.வி.பேட் இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம் ஆகியவற்றை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள், முகவர்கள் முன்னிலையில் பிரித்து காட்டினர். அதில் பதிவான வாக்குகளை காண்பித்தனர்.

அதனைத் தொடர்ந்து அந்த வாக்குப்பதிவு இயந்திரத்தில் மாதிரி வாக்குப் பதிவையும் அதிகாரிகள் முன்னிலையில் கட்சி பிரதிநிதிகள் மேற்கொண்டு சரிபார்த்தனர். இதேபோன்று புகார்கள் வந்துள்ள காஞ்சிபுரம், உத்திரமேரூர், செங்கல்பட்டு உள்ளிட்ட தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் நேற்று முதல் தொடங்கியது. இதுகுறித்து சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும், சென்னை மாநகராட்சி ஆணயருமான சமீரன் நிருபர்களிடம் கூறியதாவது:

கொளத்தூர் தொகுதியை தொடர்ந்து பிற மாவட்டங்களான காஞ்சிபுரம், விருதுநகர் மாவட்டங்களுக்குட்பட்ட இயந்திரங்கள் அந்தந்த மாவட்டங்களில் ஆய்வு செய்யப்பட உள்ளது. வேட்பாளர் தேர்வு செய்து கொடுத்த 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. வேட்பாளரின் தலைமை முகவர், பெல் நிறுவன பொறியாளர்கள் முன்னிலையில் ஆய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஏற்கெனவே அந்த இயந்திரத்தில் பதிவான வாக்குகள் முதலில் காண்பிக்கப்படும். அதன் பின்னர் பதிவான வாக்குகள் முழுமையாக அழித்துவிட்டு மீண்டும் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். இயந்திரத்தின் நம்பகத் தன்மையை பரிசோதிக்கவே இந்த நடைமுறை. சென்னையில் முதல்முறையாக இந்த சரிபார்ப்பு பணி நடைபெறுகிறது. முதலில் இரண்டு வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் நேற்று ஆய்வு செய்யப்பட்டது.

மாதிரி வாக்குப்பதிவில் குறைந்தது 500 முதல் அதிகபட்சம் 1400 வாக்குகள் செலுத்தலாம். வெவ்வேறு பகுதிகளில் உள்ள 14 வாக்குச்சாவடிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை ஒரு நாளைக்கு 2 வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தம் 14 வாக்குச்சாவடி மையங்கள் 7 நாட்களில் சரிபார்க்கப்பட்டு சான்றிதழ்கள் தயாரிக்கப்பட்டு, அது தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

* திமுக முகவர்கள் தொடர்ந்து கண்காணிப்பு – சேகர்பாபு பேட்டி
முன்னாள் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறுகையில், ‘‘14 பாகங்களுடைய வாக்குகளை மறு ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது. இந்த தொடக்க நிகழ்ச்சியை அப்பகுதியின் மாவட்ட செயலாளர் என்ற வகையில் பார்த்து விட்டு செல்வதற்கு வருகை தந்தேன். ஒட்டுமொத்தமாக நடைபெறுகின்ற இந்த மறு ஆய்வில் என்.ஆர்.இளங்கோ மற்றும் கொளத்தூர் தொகுதி தேர்தல் முகவர்களும் உடனிருந்து தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்’’ என்றார்.

Related Stories: