ஆரணி, ஜூலை 29: ஆரணி அருகே சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால் பேக்கரியை சூறையாடி உரிமையாளருக்கு மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் ஆரணி-செய்யாறு சாலை இரும்பேடு கூட்ரோட்டில் பேக்கரியுடன் கூடிய டீக்கடை நடத்தி வருகிறார்.
கடந்த 24ம் தேதி இவரது கடைக்கு வந்த 3 பேர், டீ, ஸ்நாக்ஸ் சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் சென்றனர். இதனால் உரிமையாளர் ெவங்கடேசன், அவர்களிடம் பணம் கேட்டார். ஆனால் அவர்கள் பணம் தர மறுத்ததால் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த 3 பேரும், வெங்கடேசனை ஆபாசமாக பேசி தாக்க முயன்றனர். பின்னர் பேக்கரியில், இருந்த சேர்கள், பேக்கரி பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினர். எடைபோடும் கருவியை உடைத்துவிட்டு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இதுகுறித்து ஆரணி டவுன் போலீசில் வெங்கடேசன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடையில் உள்ள கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்தனர். அதில், பேக்கரியை சூறையாடியது ஆரணி அடுத்த பழங்காமூரை சேர்ந்த சுரேஷ், இரும்பேடு எம்ஜிநகரை சேர்ந்த இந்துகுமார்(33), பழங்காமூர் இந்திராநகரை சேர்ந்த சுதாகர்(26) என தெரியவந்தது. இதையடுத்து இந்துகுமார், சுதாகரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள சுரேஷை போலீசார் தேடி வருகின்றனர்.
