×

தூத்துக்குடி அருகே ஆயில் மில் ஊழியர் வீட்டில் 28 பவுன் நகை கொள்ளையடித்த 3 பேர் சிக்கினர்

தூத்துக்குடி, ஜூலை 29: தூத்துக்குடி அடுத்த புதுக்கோட்டை அருகே உள்ள கோல்டன்நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆஷிக் தனசிங் (26). மடத்தூர் பகுதியில் உள்ள தனியார் ஆயில் நிறுவனத்தில் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மேரி (எ) தீபிகா, கர்ப்பிணியாக இருப்பதால் கடந்த 12ம் தேதி மருத்துவப் பரிசோதனைக்காக தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்திருந்தார்.

கடந்த 15ம் தேதி இரவு மீண்டும் வீட்டுக்கு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 28 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.28 லட்சம் ஆகும். இதுகுறித்து ஆஷிக் தனசிங் அளித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் சாயர்புரம் பட்டன்விளையைச் சேர்ந்த முத்துராஜா(33), கூட்டாம்புளி ஜோஷ்வா ராஜ் (25), புதுக்கோட்டை ராஜீவ்நகர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (30) ஆகியோர் இத்துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதில் ஜோஸ்வா ராஜ் மீது கோவில்பட்டியில் போக்சோ வழக்கும், முத்துராஜா மீது ஏற்கனவே திருட்டு வழக்கும் நிலுவையில் உள்ளது.

இவர்கள் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் ஜாமீனில் வந்த இவர்கள், திட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு ரமேஷ் உதவியாக இருந்துள்ளார். இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், இவர்களிடம் இருந்து ரூ.18 லட்சம் மதிப்பிலான 16 பவுன் தங்க நகைகளை மீட்டுள்ளனர். தொடர்ந்து 3 பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags : Thoothukudi ,Ashiq Dhanasingh ,Golden Nagar ,Pudukkottai ,Madathur ,Mary (A) Deepika ,
× RELATED ஏரியில் வண்டல் மண் எடுப்பதை கண்டித்து...