மதுரை, ஜூலை 29: மதுரை அழகர்கோயிலில் ஆடி தேரோட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில் எஸ்பி தேவநாதன் தலைமையில் 1000 போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மதுரை அழகர்கோவிலில் பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோயில் அமைந்துள்ளது. இங்கு நடைபெறும் விழாக்களில் சித்திரை திருவிழா மற்றும் ஆடி பெருந்திருவிழா சிறப்பு பெற்றவை. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆடி பெருந்திருவிழா கடந்த ஜூலை 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை தொடர்ந்து தினமும் காலையில் தங்கப்பல்லக்கிலும், மாலையில் அன்ன, சிம்ம, அனுமார், கருட, சேஷ உள்ளிட்ட வாகனங்களில் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று (புதன்) காலை 7.05 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் துவங்கி வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இதற்காக கோயில் கோட்டை வாசல் மற்றும் கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அழகுற காட்சியளிக்கிறது. மேலும் தேரோட்டத்திற்காக கோயில் அருகேயுள்ள தேர் பாதுகாப்பு கூண்டுகள் அகற்றப்பட்டு தேர் அலங்கரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்றது. தேரின் சக்கரங்கள் வண்ணம் தீட்டப்பட்டது.
