×

குரும்பா பாளையத்தில் புது ஏரியின் உடைந்த கடைக்கால் பகுதியை சீரமைக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

 

பெரம்பலூர்,ஜூலை 28: பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் நேற்று காலை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஷரண்யா அறி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்,குன்னம் தாலுகா, பேரளி, வடக்குத் தெருவைச் சேர்ந்த சமூக ஆர்வலான ராகவன் தலைமையில் பொதுமக்கள் அளித்தக் கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது : பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம், குரும்பா பாளையம் கிராமத்தில் குடிநீர் ஏரி உள்ளது. இந்த ஏரியானது மழைக்காலத்தில் அருகாமையில் உள்ள காடுகளில் இருந்து வரத்து வாய்க்கால் வழியே வரும் மழைநீரைப் பெறுகிறது. இந்த ஏரி நிரம்பினால் வெளியேறும் நீரானது மருதையாற்றுக்குச் செல்லும்படியான கட்டமைப்பு உள்ளது. மழைக்காலத்தில் கிடைக்கும் ஏரி நீரை மக்கள் தங்களது முக்கியக் குடிநீர் ஆதாரமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த கிராமத்திலேயே கால்நடைகள் பயன்படுத்தவும், மக்கள் குளிப்பதற்கும் என வெவ்வேறு நீர்நிலைகளும் உள்ளது. ஆனால் கவனக் குறைவாக அல்லது தவறுதலாக சில நேரங்களில் குடிநீர் ஏரிக்குள் கால்நடைகள் புகுந்துவிடுகிறது. இதனால் குடிநீருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆகையினால் இந்த ஏரியைச் சுற்றி கம்பிவேலி அமைத்துப் பாதுக்காக்கக் கோருகிறேன். இது தொடர்பாக ஊர் இளையோர்கள் சார்பாக ஏற்கனவே அளிக்கப்பட்ட மனுக்களுக்கு இதுசார்ந்த கருத்துரு அனுப்பப் பட்டுள்ளதாகச் சொல்லப் பட்டது. அதே போல, இந்த கிராமத்தில் புது ஏரி என்ற ஒரு நீர்நிலையும் உள்ளது. இதன் கடைகால் உடைந்து சில ஆண்டுகள்ஆகிறது.

இதனால் மழைக்காலத்தில் நீரானது, ஏரிக்குள் தேங்காமல் மருதையாற்றுக்குச் சென்று விடுகிறது. இது தொடர்பாக ஏற்கெனவே ஊர் இளையோர்கள் சார்பாக அளித்துள்ள மனுவிற்கு ஊராட்சியில் போதிய நிதி இல்லை என்று பதில் கிடைத்ததகச் சொல்லப் படுகிறது. ஆகையினால் மக்கள் மற்றும் நீர் நிலைகளின் நலன் கருதி ஊரக வளர்ச்சித் துறை கட்டுப் பாட்டில் உள்ள இந்த 2 ஏரிகள் சார்ந்த கோரிக்கைகளையும் விரைந்து பரிசீலித்து, உரிய திட்டங்களின் மூலம் நிதி ஒதுக்கி நிறைவேற்றிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Kurumbapalayam ,Perambalur ,District Collector ,District ,Collector ,Sharanya Ari ,Kunnam Taluka ,Perali ,North Street… ,
× RELATED பெரம்பலூரில் மக்கள் குறைதீர்...