×

பெரம்பலூர் மாவட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் ஓய்வூதியம் பெற பதிவு செய்யலாம்: கலெக்டர் அழைப்பு

 

பெரம்பலூர்,ஜூலை 31: பெரம்பலூர் மாவட்ட சுற்றுலாத் துறையில் பணிபுரியும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைய பொதுசேவை மையத்தில் பதிவுசெய்யலாம் என மாவட்டக் கலெக்டர் ஷரண்யா அறி தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது : மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம், சுற்றுலா மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் பணிபுரியும் தகுதியுடைய அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, 60 வயது நிறைவடைந்த பின் மாதந்தோறும் ரூ.3000 உறுதியான ஓய்வூதியம் வழங்கும் பங்களிப்பு அடிப்படையிலான ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தில் 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட தகுதியுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்கள் சேர்ந்து பயனடையலாம்.

பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் என்றத் திட்டம் 18 வயது முதல் 40 வயது வரையிலான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான இந்திய அரசின் பங்களிப்பு அடிப்படையிலான ஓய்வூதிய திட்டமாகும். இத்திட்டத்தில் தகுதியுடைய பயனாளிகள் மாதந்தோறும் நிர்ணயிக்கப் பட்ட தொகையை முறையாக செலுத்தி வந்தால், மத்திய அரசு அதே அளவு இணை பங்களிப்பை வழங்கும். இதன் மூலம் 60 வயதை அடைந்த பின்னர் மாதந்தோறும் ரூ.3000 உறுதியான ஓய்வூதியம் பெறும் வசதி வழங்கப் படுகிறது. சுற்றுலா வழிகாட்டிகள், ஒருங்கிணைப்பாளர்கள், வாகன ஓட்டுநர்கள் மற்றும் போக்குவரத்து சேவை வழங்குநர்கள், விடுதி மற்றும் விருந்தோம்பல்துறை பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள், கைவினை கலைஞர்கள், தெருவோரா வியாபாரிகள், கைவினைப் பொருள் உற்பத்தியாளர்கள்,

உணவகம் மற்றும் உணவு சேவை வழங்குநர்கள் மேலும் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய பிற சேவை வழங்குபவர்கள் ஆகியோர் இந்தத் திட்டத்தின்கீழ் பயனடைய தகுதியுடையவர்கள் ஆவார்கள். எனவே, தகுதியுடைய அனைத்து தொழிலாளர்களும் தங்களது ஆதார் அட்டை, சேமிப்பு வங்கி கணக்கு புத்தகம் மற்றும் செல்போன் எண்ணுடன் அருகில் பொதுசேவை மையத்தை அணுகி பதிவு செய்து பயன்பெறுமாறும், மேலும் விவரங்களுக்கு சுற்றுலா அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகம், பழைய பேருந்து நிலையம் அருகில் பெரம்பலூர் -621212 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் எனவும் மாவட்டக் கலெக்டர் ஷரண்யா அறி தெரிவித்துள்ளார்.

 

Tags : Perambalur ,Perambalur district ,Sharanya Ari ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில்...