×

கோமுகி ஆறு நீர் வற்றி வறண்டு போனதால் 25 கிராமங்களில் குடிநீர் பஞ்சம் அபாயம்

* கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பாதிக்கும்

*அணையை தூர்வார அரசு நடவடிக்கை எடுக்குமா?

சின்னசேலம் : கச்சிராயபாளையம் கோமுகி ஆற்றில் நீர் வற்றி வறண்டு போனதால் 25 கிராமங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் இருப்பதுடன், கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் கரும்பு அரவையும் பாதிக்கும் அபாயம் உள்ளது என விவசாயிகள் புலம்புகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் அருகே கல்வராயன்மலை அடிவாரத்தில் கோமுகி அணை சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் 46 அடிவரை நீரை தேக்கி வைக்கும் வகையில் காமராசர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது.

இதில் ஆற்றுப் பாசனத்தின்மூலம் 5,860 ஏக்கர் விவசாய நிலமும், முதன்மை கால்வாய் பாசனத்தின்மூலம் 5,000ஏக்கர் விவசாய நிலமும் பாசன வசதி பெறுகிறது. அதாவது இந்த கோமுகி அணையின்மூலம் கச்சிராயபாளையம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதிகளை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாய மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

மேலும் கோமுகி ஆற்றின் குறுக்கே சோமண்டார்குடி, கச்சிராயபாளையம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 11 இடங்களில் அணைகள் கட்டப்பட்டு, அதன்மூலம் சுமார் 30க்கும் மேற்பட்ட ஏரிகளில் நீரை நிரப்பியும் விவசாயம் செய்கின்றனர்.

கோமுகி ஆற்றின் கரையோர கிராமங்களுக்கும் ஆற்றில் தொடர்ந்து நீர் செல்வதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் தடையின்றி கிடைத்தது. கடந்த 30 ஆண்டுகளுக்குமுன் பருவமழை தொடர்ந்து பெய்து வந்ததால் சம்பா பருவத்துடன் சேர்த்து 3 போகமும் நெல் அறுவடை செய்தனர்.

ஆனால் அதன்பிறகு பருவகால மாற்றத்தால் பருவமழை பொய்த்து போனது.
அதுமட்டுமல்லாமல் கோமுகி அணை கட்டி சுமார் 60 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இந்த அணையை இதுவரை தூர் வாரி பராமரிக்கவில்லை.

இதனால் கனமழை காலங்களில் கல்வராயன்மலை காட்டாறுகளில் இருந்து மழை நீர் வெள்ளப்பெருக்கெடுத்து வரும்போது பாறைகள், மண், மணல் அடித்து வரப்பட்டு, 60 ஆண்டுகளாக மண் துகள்கள் படிந்து வருவதால் தற்போது சுமார் 30 சதவீதம் வரை அணை தூர்ந்து போய் மண்மேடாக காட்சி அளிக்கிறது.

இதனால் மழை காலங்களில் அணையில் போதிய அளவு நீரைதேக்கி வைக்க முடியவில்லை. இதனால் தற்போது குறைவான அளவு நீரையே தேக்கி வைக்க முடிகிறது. மேலும் அதிகளவு நீரைத்தேக்கி வைக்கும் அளவுக்கு கரைகளும் உயரமானதாக இல்லை. அதைப்போல இந்த அணையில் ஆக்கிரமிப்புகளும் அதிக அளவில் உள்ளது. இதனையும் அகற்ற முன்வரவில்லை.

இதனால் கடந்த காலங்களில் 3 போகத்திற்கு கிடைத்த தண்ணீர் தற்போது சம்பா பருவ சாகுபடிக்கே போதுமானதாக இல்லை. மேலும் சில வருடங்களில் சம்பா பருவ சாகுபடியின்போது கதிர் முற்றிய நிலையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு நெற்கதிர்கள் காய்ந்து போனதும் உண்டு. மேலும் தற்போது எல்.நினோவால் நீர்மட்டம் குறைந்து குடிநீர் பற்றாக்குறை ஏற்படும். இதனால் விவசாயமும் பாதிக்கும்.

தற்போது அணை, ஆறு வறண்டு போய் உள்ளதால் ஆற்றின் கரையோர கிராமங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகையால் சுமார் 15,000 ஏக்கர் விவசாயிகள் நலன்கருதி, 25 கிராம மக்களின் குடிநீர் ஆதாரம் கருதி தற்போது பதவி ஏற்றிருக்கும் புதிய அரசாங்கம் தனி அதிகாரிகளை நியமித்து கோமுகி அணையை பார்வையிட்டு, தூர் அள்ளி ஆழப்படுத்துவதுடன், ஆக்கிரமிப்புகளை அகற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கவில்லை

கச்சிராயபாளையம் கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவைக்கு தேவையான தண்ணீர் பொட்டியம் எல்லையில் உள்ள கோமுகி ஆற்றில் இருந்து குழாய் பதித்து கொண்டு வரப்படுகிறது. ஆனால் தற்போது அந்த ஆறு வறண்டு போய் உள்ளதால் கரும்பு அரவைக்கு தேவையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும் கிணறுகளை ஆழப்படுத்தவும், சைடு போர் போட்டு தண்ணீர் கிடைக்கவும் ஆலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் விவசாய கிணறுகளில் இருந்து பணத்திற்கு தண்ணீர் வாங்குவது என்பது அதிக பொருளாதார இழப்பாகும். மேலும் கரும்பு அரவை காலத்தில் தேவையான தண்ணீர் கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளது. இதனால் அடுத்த மாத தொடக்கத்தில் அரவை திட்டமிட்டபடி துவங்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Tags : Gomukhi River ,Chinnasalem ,Kachirayapalayam ,Gomukhi Cooperative… ,
× RELATED முதலமைச்சர் அலுவலகம் நாமக்கல் கவிஞர்...