புனித ஜார்ஜ் கோட்டையில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த முதல்வரின் அலுவலகம் இடம் மாறுகிறது: நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றும் பணிகள் தீவிரம்

சென்னை: புனித ஜார்ஜ் கோட்டையில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த முதல்வரின் அலுவலகம், இட நெருக்கடி காரணமாக, நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது மாடிக்கு மாற்றும் பணிகள் தொடங்கியுள்ளது. சென்னையில் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள பாரம்பரிய கட்டிடத்தில்தான், முதல்வர் அலுவலகம், அமைச்சர்கள் அலுவலகம், சட்டப்பேரவை அரங்கு, தலைமை செயலாளர் மற்றும் பல்வேறு துறை செயலாளர்கள் அலுவலகங்கள், தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் உள்ளிட்ட தலைமை செயலக அலுவலகங்கள் அனைத்தும் இயங்கி வருகின்றன. இங்கிருந்து தான் தமிழகம் முழுவதும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

ஜார்ஜ் கோட்டை கட்டிடத்தில் செயல்பட்டு வரும் நீர்வளத்துறை, நெடுஞ்சாலை துறை, பொதுப்பணித்துறை, வருவாய் துறை, சுகாதாரத்துறை, தொழில்துறை, கல்வித்துறை, மீனவர்கள் நலத்துறை, கால்நடை, வேளாண், வனம், எரிசக்தி, கால்நடை, சமூகநலம் உள்ளிட்ட 33 அமைச்சர்களின் துறை அலுவலகங்கள், தலைமை செயலக வளாகத்தில் 10 மாடியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் செயல்பட்டு வருகிறது.

தலைமை செயலகத்தில் இடநெருக்கடி காரணமாகவும், பொதுமக்களின் வருகை அதிகரிப்பை கருத்தில் கொண்டும் இதுவரை புனித ஜார்ஜ் கோட்டையின் முதல் தளத்தில் செயல்பட்டு வந்த முதல்வர் விஜய்யின் அலுவலக அறையை இடமாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதன்படி, தலைமை செயலக வளாகத்தில் உள்ள 10 மாடிகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு முதல்வர் விஜய்யின் அலுவலக அறை, அவரது செயலாளர்கள் 4 பேரின் அறைகளும் 10வது தளத்தில் அமைய உள்ளது.

இதற்கான பணிகளை பொதுப்பணித்துறை ஊழியர்கள் நேற்று முதல் தொடங்கி உள்ளனர். அதன்படி, 10வது தளத்தில் உள்ள மாநாடு கூட்ட அரங்கின் தரையில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ் மற்றும் மேற்கூரைகள் அப்புறப்படுத்தப்பட்டு, பல்வேறு நவீன வசதிகளுடன் முதல்வர் விஜய்க்கான அலுவலக அறை வடிவமைக்கப்பட உள்ளது. இதுதவிர, முதல்வரின் அறை அருகே முதல்வரின் 4 தனி செயலாளர்களுக்கும் அறை புதிதாக அமைக்கும் பணிகள் தொடங்கியது.

முதல்வர் அலுவலகத்தின் 10வது தளத்தில் இருந்து கடலின் அழகை ரசிக்கும் வகையில் அலுவலகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்தில் பெரிய மாநாடு கூடம் மற்றும் உணவக பகுதியை முதல்வரின் அலுவலகமாக மாற்றும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருவதால், இனி தலைமை செயலகத்தில் பெரிய அளவில் கூட்டம் எங்கு நடைபெறும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.  வழக்கமாக, இந்த மாநாட்டு அறையில் ஐஏஎஸ், ஐபிஎஸ், மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட முக்கிய கூட்டங்கள் நடைபெறும்.

இனி இதுபோன்ற கூட்டங்களில் தனியார் சொகுசு ஓட்டல்களில் நடைபெற வாய்ப்புள்ளது. முதல்வர் அலுவலகத்தை மாற்றும் பணிகள் அனைத்தும் இன்னும் ஒரு மாதத்தில், அதாவது ஆகஸ்ட் மாத இறுதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து செயல்பட்ட தமிழ்நாட்டு முதல்வர்களிலேயே பாரம்பரிய அலுவலக கட்டிடத்தில் இருந்து புதிய இடத்துக்கு அலுவலகத்தை மாற்றும் முதல் முதல்வர் விஜய்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

* வரலாற்று சிறப்பு மிக்க அலுவலகம்
புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள முதல்வரின் அறை, தமிழக அரசியல் வரலாற்றின் மிக முக்கிய அதிகார மையமாகவும், பல சகாப்தங்களை, பல ஆட்சி மாற்றங்களை கண்ட இடமாகவும் விளங்குகிறது. சென்னை புனித ஜார்ஜ் கோட்டையின் முதன்மை கட்டிடத்தின் முதல் தளத்தில் பல ஆண்டுகளாக முதலமைச்சரின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் இந்த அலுவலகத்தில்தான் அமர்ந்து மாநிலத்தின் நிர்வாக முடிவுகளை எடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறை இதுவாகும். அந்த அறை தான் தற்போது முதல்வர் விஜய்க்காக, நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு இடம் மாற்றப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

* வாஸ்து காரணமா?
தற்போதுள்ள முதல்வர் அலுவலகத்தில் இடநெருக்கடி ஏற்படுவதால், முதல்வரை சந்திக்க வருபவர்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே, நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள, 10வது தளத்தை முழுமையாக, முதல்வர் அலுவலகமாக மாற்ற திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்பட்டாலும், இது உண்மை இல்லை என்றே தலைமை செயலக அதிகாரிகள் தெரிவித்தனர். ‘முதல்வர் விஜய் தற்போது பயன்படுத்தும் அறை வாஸ்துபடி சரியில்லை.

தொடர்ந்து உச்சத்தில் இருக்க வேண்டும் என்றால், உயரமான கட்டிடத்தில் முதல்வர் அலுவலகம் செயல்பட வேண்டும். அவரது இருக்கை கிழக்கு பார்த்து உட்காரும் வகையில் இருக்க வேண்டும்’ (கடல் அலையை ரசித்தபடி) என முதல்வரின் ஆஸ்தான ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் கூறியதால்தான் பாரம்பரிய கட்டிடத்தில் இருந்து முதல்வரின் அலுவலகம் இடம் மாறுவதாக கூறப்படுகிறது.

காரணம், தவெக தலைவர் முதல்வர் விஜய் ஜோதிடத்தில் மிகவும் நம்பிக்கை கொண்டவர். ‘தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்’ என விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் உறுதியாக கூறினார். ஓட்டு எண்ணிக்கை தொடங்கும் முன்பே, விஜய் வீட்டிற்கு பூங்கொத்துடன் சென்று வாழ்த்து கூறினார். அவர் கணித்தது போலவே, தவெக வெற்றியை பெற்று ஆட்சியை பிடித்தது. இந்நிலையில், முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் கடந்த மே 12ம் தேதி நியமனம் செய்யப்பட்டார்.

இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். ‘ஜோதிடர் ஒருவர் முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டால் மக்கள் மத்தியில் ஜோதிடம் தொடர்பான நம்பிக்கையை அதிகப்படுத்தவே உதவும்’ என்று கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து மே 13ம் தேதி அவரது நியமனத்தை தமிழக அரசு திரும்ப பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: