நடத்தை சந்தேகத்தில் பயங்கரம்: மனைவியை கழுத்து நெரித்து கொன்ற கணவர் கைது

 

ஆம்பூர்: நடத்தை சந்தேகத்தில் மனைவியை கழுத்து நெரித்துக்கொன்ற கணவரை போலீசார் இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தோட்டாளம் ஊராட்சி உடையராஜபாளையத்தை சேர்ந்தவர் பாபு(35). ஹாலோபிளாக் கல் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீதேவி(34). இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஸ்ரீதேவி நடத்தையின் மீது பாபுவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுதொடர்பாக தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டதால் தேவி அதே பகுதியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டாராம். நேற்றுமுன்தினம் மாமியார் வீட்டிற்கு சென்ற பாபு, மனைவியை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை ஸ்ரீதேவி வீட்டில் இறந்து கிடந்தார். அவரை, பாபு கொன்றுவிட்டு தலைமறைவானது தெரியவந்தது. தகவல் அறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் பாபுவை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலை மறைவான இடத்தில் பதுங்கியிருந்த பாபுவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தம்பதியிடையே நேற்று முன்தினம் நள்ளிரவு தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த பாபு, அங்கிருந்த சேலையால் தேவியின் கழுத்தை நெரித்துக்கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் பாபுவை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: