கோவை :தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்தவர் வேல்முருகன் (34). இவர், கோவை சேரன் மாநகரில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது நண்பர் நாகராஜ் (36). இருவரும் கொலை முயற்சி வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் இரண்டு பேரும் சிறையில் முதலில் யார் ஜாமீனில் வெளியே செல்கிறார்களோ அவர், மற்றவருக்கு ஜாமீன் கிடைக்க உதவி செய்ய வேண்டும் என பேசிக்கொண்டனர்.
ஆனால், முதலில் ஜாமீனில் வந்த வேல்முருகன், தனது நண்பர் நாகராஜை, 5 மாதமாகியும் ஜாமீனில் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த நாகராஜ், சிறையில் சந்திக்க வந்த தனது நண்பர்களிடம் வேல்முருகனை கடத்தி பணம் பறிக்க கூறியுள்ளார். இதையடுத்து நாகராஜின் நண்பர்கள் 6 பேர் கொண்ட கும்பல் கடந்த மாதம் 18ம் தேதி இரவு வேல்முருகனை காரில் கடத்தி சென்று, ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக பணம் கேட்டு மிரட்டி, தாக்கியுள்ளனர்.
அந்த கும்பலிடம் இருந்து தப்பித்த வேல்முருகன் சம்பவம் குறித்து பீளமேடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தல் கும்பலை சேர்ந்த ரவுடிகள் மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த தர்மராஜ் (32), செல்லூரை சேர்ந்த வெங்கட்பிரபு (25), தூத்துக்குடி சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து (32), தேனி பெரியகுளம் பகுதியை சேர்ந்த சசிகுமார் (23), கோவை ரத்தினபுரியை சேர்ந்த சுந்தரமகாலிங்கம் (29), பெங்களூரை சேர்ந்த சுதீப் (23) ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இவர்களில் தர்மராஜ், வெங்கட்பிரபு, இசக்கிமுத்து, சசிகுமார், சுந்தரமகாலிங்கம், சுதீப் ஆகிய 5 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பீளமேடு இன்ஸ்பெக்டர் அர்ஜூன்குமார், மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணனிடம் பரிந்துரை செய்தார். அதன்பேரில், 5 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கமிஷனர் நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து 5 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
