கோவை: செல்போனில் ஆபாச படம் பார்த்ததாகக் கூறி, போலீஸ் அதிகாரி போல பேசி பணம் பறித்த இருவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (50). இவரை மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். அந்த மர்ம நபர், தான் பீளமேடு எஸ்பி., அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார். தொடர்ந்து அந்த மர்ம நபர், ஜெகதீசனிடம் நீங்கள் செல்போனில் ஆபாச படங்கள் பார்த்துள்ளீர்கள், அதற்கான ஆதாரங்கள் எங்களுக்கு கிடைத்துள்ளது என்றுள்ளார். மேலும், அந்த மர்ம நபர், உங்களை கைது செய்ய போகிறோம் என மிரட்டியுள்ளார்.
அப்போது ஜெகதீசன், தான் எந்த படமும் பார்க்கவில்லை என்றுள்ளார். அதற்கு அந்த மர்ம நபர், உங்களை கைது செய்யாமல் விடவேண்டுமானால் பணம் வேண்டும் என கேட்டுள்ளார். இதனால், பயந்து போன ஜெகதீசனும் தான் பணம் தருவதாக கூறி, மர்ம நபர் தெரிவித்த செல்போன் எண்ணுக்கு ஜிபே மூலம் ரூ.38 ஆயிரத்தை அனுப்பி வைத்தார். சிறிது நாட்கள் கழித்து ஜெகதீசன் தனக்கு நடந்த சம்பவம் குறித்து தனது நண்பரிடம் தெரிவித்துள்ளார். அப்போது அவர், பணத்தை பெற்றது மோசடி கும்பல் என தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெகதீசன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கோவை மாநகர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், ஜெகதீசனை போலீஸ் போல் நடித்து மிரட்டி பணம் பறித்தது கோவை பச்சாபாளையத்தைச் சேர்ந்த சபரி (25) மற்றும் சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த வினு (21) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
